Sunday, January 25, 2015

பலிக்குமா இந்த பகல் கனவு

பகல் கனவு - ஜிஜுபாய் பதேக்கா [தமிழில் - சங்கரராஜுலு]
வெளியீடு - நேஷனல் புக் டிரஸ்ட் [இணையத்தில் கிடைக்கிறது]

இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்ததும் தான் ஆசிரையரைப் பற்றி தேடினேன்.இந்தியாவில் Montessori கல்வி முறையை அறிமுகப்படுத்தியது ஜிஜுபாய் பதேக்கா அவர்கள் தான்.Montessori கல்வி முறையைப் பற்றி போதுமான புரிதல் எனக்கில்லை.விளையாட்டு மூலம் சொல்லித் தருவார்கள், வழக்கமான வகுப்பு முறைகளுக்கு பதிலாக Mixed age வகுப்பு முறைகள் இருக்குமென‌ இணையத்தில் படித்திருக்கிறேன்.பெங்களூரில் நிறைய Montessori  க்கள் இருக்கின்றன (அது உண்மையிலே Montessori  யா என்பதை இனிமேல் தான் விசாரிக்க வேண்டும்).எனது மகளுக்காக பள்ளிகளை விசாரித்தப் பொழுது சாதாரண பள்ளிகளை விட அசாதாரண கட்டணங்கள் இருந்ததால் விட்டுவிட்டேன்.


இந்தப் புத்தகம் Montessori கல்விமுறையின் தாக்கத்தில் தான் எழுதியது என முன்னுரையில் படித்தேன்.நமது சூழலிற்கு தகுந்தாற் போல் அந்த கல்விமுறையை மாற்றி அதனை 4ம் வகுப்பில் செயல்படுத்தி பார்க்கும் ஒரு அசிரியரியரின் கனவு தான் இந்த "பகல் கனவு".கதையின் நாயகன் ஆசிரியர் தான்.அவர் , மனப்பாடம் செய்யும் கல்வி முறையிலிருந்து விலகி நிற்க முயற்சிக்கிறார்.மாணவர்களுக்கு எது முக்கியம் ? முழுமையான புரிதலா அல்லது தேர்வின் மதிப்பெண்களா ? இது தான் அவரது கேள்வி.மதிப்பெண்கள்,வேலை,சம்பளம் என்ற பெரும்பாலோரின் போக்கை கேள்வி கேட்பது போல் இருந்தது.புரிதல் தான் கல்வியின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும் என்பது இந்த ஆசிரியரின் ஆசை மட்டுமல்ல‌.அது எல்லோரது ஆசையும் கூட."புரிந்து படி" என ஆசிரியர்,பெற்றோர்,அறிஞர்கள்,அனைவரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.ஆனால் உண்மையில் அதை செய்வது கடினமாக தான் இருந்தது.தேர்விற்காக படிக்கும் என்னைப் போன்ற கட்சியினர் அப்பொழுது வேண்டுமானால் புரிந்துப் படிக்கலாம் , ஆனால் தேர்வு முடிந்ததும் காற்றில் கரைந்து விடும் என்பது தான் உண்மை.ஏனென்றால் அதன் பயன்பாடு விளங்கியதேயில்லை.அப்படி ஒரு basement , பள்ளியிலிருந்தே அமைந்துவிட்டது.Rhymes லிருந்து ஆரம்பமாகிறது நமது கல்விதிட்டங்களின் ஓட்டைகள்.எதற்காக rain rain go away , london bridge is falling down,hot cross bun போன்ற பாடல்கள் இன்றும் மாறாமல் உள்ளது? இந்த கேள்வியை யாரிடம் கேட்பது என்று விளங்காமல் தான் நாம் எல்லாரும் இருக்கின்றோம்.


கல்கி,சாண்டிலியன் போன்றோரின் எழுத்துக்கள் நம்மில் பலரிடம் ஏற்படுத்திய வரலாற்று ஆர்வத்தை ஏன் பாடப்புத்தகத்தால் ஏற்படுத்த முடியவில்லை.அவர்கள் கற்பனையை கலக்கின்றார்கள் என்றாலும் உண்மையையும் நம் மனதில் பதிய செய்துவிடுகிறார்கள் என்பதை ஒற்றுக்கொள்ளதான் வேண்டும்.வரலாற்றைப் போல ஒரு சுவாரஸ்யமான பாடம் இல்லை என்று எனக்கு இப்பொழுது தோன்றுகிறது.வரலாற்றை சுலபமாக கதையாக சொல்ல முடியும் ஆனால் வகுப்புகள் அப்படி இருப்பதில்லை.அவை வருடங்களாகவும்,வாயினுள் நுழையாத பெயர்களாகவும் தான் இருக்கிறது

இதே மனப்போக்கில் தான் இந்தக் கதையின் நாயகனும் இருக்கிறார்.அவர் தனது வகுப்பில் முதல் 3-4 மாதத்திற்கு வெறும் கதைகளை தான் சொல்கிறார்.கற்பனைகள் மூலம் மாணவர்களை கதைக்குள் இழுக்கிறார்.கதைகளை மெல்ல மெல்ல அவர்கள் மனதில் பதிக்கின்றார்.கதைகளை நாடகமாக உருமாற்றுகிறார்.பின்னர் கதை உண்மையை விட்டு எவ்வளவு தூரம் மாறியிருக்கிறது என்பதை யோசிக்கிறார்.அடுத்த நாள் உண்மை கதையை சொல்கிறார் , ஆனால் மாணவர்கள் ஏற்க மறுக்கின்றனர்.5000 குதிரைகள் வந்த இடத்தில் 50 எனும் மாற்றத்தைக் கூட மாணவர்கள் கண்டுபிக்கின்றனர் என்பது அவர்கள் எவ்வளவு தூரம் கதைக்குள் இருக்கின்றனர் என்பதை ஆசிரியருக்கு உணர்த்துவதாக இருக்கிறது.மெல்ல மெல்ல உண்மையினை கதைக்குள் கொண்டு வருவதற்கு அவருக்கு சிலக் காலம் தேவைப்படுகிறது.

மாணவர்கள் சரியான வழியில் இழுந்து செல்வதாக அவருக்கு முழு நம்பிக்கை பிறந்ததும் , ஒவ்வொரு கட்டமாக நகர்கிறார்.அவரை கிண்டல் செய்த மற்ற வகுப்பாசிரியர்களும் கவணிக்க செய்யும் சந்தர்ப்பமொன்று பள்ளிவிழாவில் அவருக்கு அமைகிறது.எப்பொழுதும் நடக்கும் அபத்தத்தை எதிர்த்து தனியாக ஒரு நாடகம் போடுகின்றனர்.எந்த அலங்காரமும் இல்லை,மனனம் செய்யும் வசனமுமில்லை . அவர்கள் அன்றாடன் பேசிய கதைகள்,அன்றாடம் அவர்கள் வகுப்பில் நடித்த நாடகங்களையே அங்கு அரங்கேற்றம் செய்தனர்.தெளிவான நடிப்பும்,வசனங்களும் அங்கு அனைவரையும் ஆச்சரியப்பட செய்கிறது.அதுவே அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது.

கல்வி நிர்வாகி நாயகனின் முறை சரியானது என்பதை உணர்ந்து அவரிடம் விசாரிக்கும் போது , இலக்கண வகுப்புப் பற்றி இருவரும் பேசுகின்றனர். அவரை மிகவும் பாராட்டி வேண்டிய உற்சாகத்தை தருகிறார் கல்வி நிர்வாகி.ஆண்டு இறுதி தேர்வில் அவரது வகுப்பு மாணவர்கள் என்ன செய்கின்றனர் என்பதே மீதி கதை.எனக்கு அந்த இலக்கண விளக்கம் மிகவும் பிடித்துவிட்டது.இந்த முறையை நாமும் நமது வீட்டில் முயற்சி செய்து பார்க்கலாம் என தோன்றியது.பள்ளியில் மாற்றங்களை எதிர்ப்பார்க்கலாம் ஆனால் நடக்குமென சொல்ல முடியாது.ஆனால் வீட்டில் கண்டிப்பாக நாம் முயற்ச்சிக்கலாம் , என்ன...கொஞ்சம் ஆர்வமும் அதற்கான உழைப்பும் தேவை.அதற்கு இந்த புத்தகம் உறுதுணையாக இருக்கும்.

இந்தப் புத்தகம்  1931 ல் குஜராத்தியில் எழுதியது.அப்பொழுதே கல்விமுறையின் போக்கை கண்டு மனம் வருதிருக்கிறார் என்பது வியப்படையச் செய்கிறது. அப்பொழுது அவர் கண்ட கனவு , 80 ஆண்டுகள் கடந்தும் கனவாகவே இருப்பதால் தான் "பகல் கனவு" என்று பெயர் வைத்தாரோ..?



Monday, January 12, 2015

2014 - வாசிப்பு - இத்தோடு நிறுத்திக்கலாம்

33.மரம் - ஜீ.முருகன்


இந்த நாவலைப் பற்றி இரு வேறு கருத்துக்கள்  என்னிடன் இருக்கிறது.என்னைப் பொறுத்தவரை கடவுள் பாதி மிருகம் பாதி தான்.நாவல் திருவண்ணாமலையில் நடக்கிறது , காலத்தால் அங்கு நடைபெறும் மாறுதல்களை கதாப்பாத்திரங்கள் பேசுகிறது , உறவுகள் , பந்தங்கள் , அதன் முரண்பாடுகளும் என நகர்கிறது.நாவலில் முக்கியமாக இரண்டு நபர்களைப் பற்றி பேச்சு அடிக்கடி வருகிறது , அதில் ஒருவர் கோபாலர் எனும் சந்நியாசி(இந்த கதாப்பாத்திரம் ரமணரைத் தான் சொல்கிறாரா என்று தெரியவில்லை) மற்றும் நீட்ஷேவின் வார்த்தைகள்.கோபாலர் ஆசிரமம் அடிக்கடி இதில் வரும் , அவர் அங்குள்ள மரத்தில் தூக்குமாட்டி இறந்தவிடுகிறார் என்று சொல்லப்படுகிறது ஆதலால் அந்த மரத்தை மக்கள் கோபாலராக நினைக்கின்றனர்.அவரது இறப்பிற்கு பிறகு அந்த ஆசிரமத்தின் வேறுபாடுகளும் பேசப்படுகிறது.அத்தோடு பொருளாதார சந்தை எப்படி ஆன்மீகத்தையும் வியாபரமாக மாற்றுகிறது என கதாப்பாத்திரங்கள் உரக்கப் பேசுகிறது.அந்த ஆசிரமத்தின் ஒரு விஞ்ஞானி ஒருவரும் வந்து சேருகிறார் , அவர் மூலம் எப்படி விஞ்ஞானத்தின் மீதும் சாடுகிறார்கள்.தவிர்க்கமுடியாத வார்த்தகளாக அவை நம் மனதில் வாசிக்கும் போது பதியத்தான் செய்கிறது.மேலும் முதன்மையாக உறவுகளையும் அதிலுள்ள சிக்கல்களையும் பேசுகிறது.நாவல் செம என்று சொல்லும் தருணத்தில் நாவலின் வரும் ஏற்றுக்கொள்ளப்படாத(என்னால்) விஷயம் மனதை வதைக்கிறது. கலாச்சாரம் எனும் போர்வையில் சிக்க விரும்பாத மனிதர்களின் கதை என்றாலும் அவர்களும் தங்களது வாழ்வில் மிகுந்த மன உலைச்சலுக்கே ஆளாகின்றனர் என்றே தோன்றுகிறது.கலாச்சாரத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கும் அதை மீறுபவர்களுக்கும் குறைந்தப்பட்ச வித்தியாசமே தெரிகிறது.அவர்களது வாழ்வு சுதந்திரம் நிறைந்ததாக தெரிந்தாலும் அது வெறும் பிம்போமோ என தோன்றுகிறது.முருகனின் எழுத்து நடை ரசிக்க வைத்தாலும் நாவலை முடிக்கும் போது ஒரு குழப்பமான மனநிலையே என்னிடம் இருந்தது.குறிப்பு : இதில் A விஷயங்கள் நிறைந்திருக்கிறது.


34.பூமியின் பாதிவயது - அ.முத்துலிங்கம்


வாசிப்பில் அதிகம் சோகம் கலந்திருப்பதாகவே இருக்கிறது.மகிழ்வை பதிவு செய்யும் இலக்கியம் மிகவும் குறைவே.அப்படி பதிவு செய்வதில் அ.முத்துலிங்கத்திற்கு எப்பொழுதும் ஒரு இடமிருக்கும்.அவரது 3 நூல்கள் படித்திருக்கிறேன்.அதில் அனைத்திலும் நான் ரசித்த மிகவும் சாதரண நிகழ்வை அழகாக பதிந்திருப்பார்.அந்த வகையை சார்ந்தது தான் இந்தப் புத்தகம்.இது அவர் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே.20 சதவித கட்டுரைகள் எனக்கு புரியவில்லை , அதை தவிர்த்து மற்றவை அனைத்தும் செம என சொல்ல வைத்தது.GPS device வைத்து technical விவரம் இல்லாது 2 பக்க கட்டுரை எழுதியிருக்கிறார்.ஒரு எளியவன் முதன் முதலாக அந்த சாதனைத்தை பார்ப்பதிலிருந்து அதை முழுவதுமாய் உப்யோகமாய் பயண்படுத்தும் வரை.ஒரு கருவி அவனது வாழ்வில் எப்படி அங்கமாய் ஆகும் வரை என சொல்லலாம்.நான் மிகவும் ரசித்த கட்டுரை அது.அதேப் போன்று தமிழ் யுனிகோட் பற்றி ஒரு கட்டுரை , ஆவண செய்யவேண்டிய விஷயம்.இது மாதிரி பல ருசிகர கட்டுரைகள் இருக்கின்றது.கொஞ்சம் பொறுமையாக படித்தால் மிகவும் ரசிக்கலாம்.மொழிப்பெயர்ப்புகள் என்ற தலைப்பில் வரும் சில கதைகளும் , சில புத்தகங்கள் பற்றி வரும் கட்டுரைகளும் புரியாமல் சலிப்பை ஏற்படுத்தியது.மற்ற அனைத்தும் மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது.

35.அகம் புறம் - வண்ணதாசன்


இந்தப் புத்தகம் ரொம்ப நாளாக எனது அலமாரியில் உறங்கியது . ஏனென்றால் வண்ணதாசனின் எழுத்துக்கள் போதுமான நேரம் கிடைத்தால் தான் என்னால் படிக்க முடியும்.ஆதலால் தக்க நேரத்திற்காக காத்திருந்தேன்.தனிமையில் இரண்டு நாள் கிடைத்தது.சரியென வண்ணதாசனுக்கு அதை கொடுத்துவிட்டேன்.ரொம்ப பொறுமையாகவும் , ரசித்தும் வாசித்தேன்.அவரது சின்ன சின்ன அனுபங்களை அழகாக பதிந்திருந்தார்.அவர் சந்தித்த மனிதர்களைப் பற்றியே அதிகம் இருந்தது.விதவிதமான மனிதர்களைப் பற்றி அவர் பேசும் போது நமது நினைவின் ஓரத்தில் ஒளிந்திருக்கும் நபர்கள் நினைவிற்கு வருகின்றனர்.திங்கள் கிழமை மனிதர்கள் என அவர் சில இடங்களில் கிழமைகளை முன்னிறுத்தி மனிதர்களை குறிப்பிடுவது ரசிப்பதாக இருந்தது.வாசிக்கும் போது சண்டையிட்ட நண்பருடனோ ,ரொம்ப நாளாக பேசாம இருந்திருக்கும் உறவிடனோ பேச வேண்டும் என தோன்றும் . (எல்லாம் சொந்த அனுபவம் தான்).


36.அறம் - ஜெ மோ


ஜெ மோ வின் மிகச் சிறந்த படைப்பென அனைவரும் சொல்லும் புத்தகம்.எனக்கு மிகவும் பிடித்த புத்தகம்.நாயகராக வாழ்ந்த சில மக்களின் வாழ்வினை சொல்லும் புத்தகம்.இந்தப் புத்தகத்தினைப் பற்றி யாருடனாவது பேசினாலும் அவர்கள் சொல்லும் முதல் கதை "யானை டாக்டர்" தான்.இணையத்திலும் கிடைக்கிறது.ஆங்கிலத்திலும் மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறது.வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் பற்றின கதை தான் . மிக முக்கியமான கதையிது.யானைகளுக்காக , அதன் உரிமைக்காக , அதற்கு நடக்கும் அநீதிகளை எதிர்த்து போராடி , தன்னால் முடிந்த உரிமைகளை அதற்கு கிடைக்கச்செய்த ஒருவரின் கதை.யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் நடக்கச் செய்தது இவரது உழைப்பு தான்.இன்னொறு கதையில் உலக பாஸ்போர்ட் என அமைப்பும் அதிலிருந்த ஒரு வெளிநாட்டவர் இந்தியாவிலே இருக்கிறார்.அமெரிக்காவில் எல்லாமே ரகசியமாய் உலவு பார்க்கப்படுகிறது , இந்தியாவில் தான் உண்மையான சுதந்திரத்தை உணர்கிறேன் என்று வரும்.இந்த வரிகள் சற்றே யோசிக்க வைக்கிறது , தற்பொழுது நம்ம ஊரில் இந்த வரிகள் ஒற்றுவருமென தோன்றவில்லை.காலம் நம்மை எவ்வாறு மாற்றிகிறது என்றே தோன்றுகிறது.வாசித்த சில மாதங்கள் ஆகிவிட்டன , இன்னும் இந்தப் புத்தகத்தின் நிறைய கதைகள் நினைவில் இருக்கிறது.

கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் என பட்டியல் ஒன்றை தயாரித்தால் , இந்தப் புத்தகத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்.


37.கனவுத் தொழிற்சாலை - சுஜாதா


சினிமா உலகத்தினைப் பற்றின நாவல்.ஒரு சினிமா நாயகன்-சினிமா நாயகி.அவர்களின் காதல் , திருமணம் .நாயகனின் காதல் அதலால் ஏற்படும் மனக்கசப்பு என நாம் தமிழ் சினிமாவில் பார்த்த கதை தான்.காலம் கடந்து நான் படிப்பதால் அனைத்தும் ஏற்கனவே திரைப்படங்களில் பார்த்தவையாகவே இருந்தது.ஆனால் சுஜாதாவின் வரிகள் பக்கங்களை பறக்கச் செய்கிறது.நாவலில் எந்த பக்கமும் சலிப்பில்லாமல் செல்கிறது.சினிமா உலகின் பற்றின படைப்பு என வரும்போது அசோகமித்ரனின் கரைந்த நிழல்கள் என்ற நூலும் , இந்த நூலும் இலக்கிய உலகில் சொல்லபடுவது.ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்த நூல் சினிமா உலகில் நாயனாகவும் , நாயகியாகவும் கொடிக்கட்டி பறக்கும் நபர்களைப் பற்றி மட்டுமே அதிகம் பேசுகிறது.அவர்களுக்குள் நடக்கும் மனப் போராட்டங்களையும்,வெற்றியையும், தோல்வியையும் பற்றி பேசுகிறது.ஒரு கிளைக் கதையாகத் தான் துனை நடிகை ஒருவர் வருகிறார்.அத்தோடு சினிமாவை உண்மையாக நேசிக்கும் ஒருவரும் வருகிறார்.இன்னும் நிறைய சினிமாவைப் பற்றி பேசியிருக்கலாமோ என்று தான் தோனியது.


39.சுமித்ரா - கல்பட்டா நாராயணன் [தமிழில் : கே.வி.ஷைலஜா]


முகப்புத்தகத்தைப் பற்றி எவ்வளவு வசைப்பாடினாலும் , அவ்வப்போது சில அரிய நூல்களை இதுத்தான் எனக்கு அறிமுகப்படுத்துகிறது .அப்படி எனக்கும் அறிமுகமான நூல் தான் இந்த சுமித்ரா(மலையாள மொழிப்பெயர்ப்பு). இறப்பு என்பது ஒரு முடிவு என்பதாலோ என்னவோ 2004ல் நான் வாசடித்த கடைசி நாவலாக இது இருந்திருக்கிறது.ஏனென்றால் இந்த நாவல் ஒரு இறப்பை தான் கதைக் களமாக வைத்திருக்கிறது.சுமித்ராவின் இறப்புத் தான் இந்த நாவல்.இறந்ததும் அவளை இறுதியாக காண வந்தவர்களின் மன ஓட்டத்தைத் தான் சொல்கிறது.அவளது கணவன்,மகள்,அவளிடம் நகை கொடுத்த வைத்தவள்,பாத்திரம் விற்கும் வியாபாரி,மகளின் தோழி,கல்லூரி தோழி,பக்கத்து வீட்டு பையன் என ஒவ்வொருவரின் மனதில் ஓடும் காட்சிகளின் தொகுப்பே இந்த நாவல்.அவள் இறந்ததை ஒவ்வொருவரையின் மன ஓட்டத்தில் மீண்டும் நாம் நினைவுப்படுத்திக் கொள்ள முடியும்.இறந்த வீடு எப்போதும் எவ்வளவு சத்தமாக இருந்தாலும் இறந்தவரின் கட்டுப் போட்ட முகத்தையோ,அந்த கால் கட்டை விரலையோ,சலனமில்லாத கைகலையோ பார்க்கும் போது மனம் அவரது நினைவலைகளை எல்லையற்று கடல் போல உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது.இறந்தவரோடு பேசிய வார்த்தைகள் நினைவில் ஆழத்தில் இருந்தாலும் எப்படியோ உயிர் பெற்று அந்த ஒரு நிமிடத்தில் அவரோடான உறவை மீட்டெடுத்து விடுகிறது.இந்த நாவலிலும் அப்படித்தான் ஒவ்வொருவரும் சுமித்ராவை நினைவுகளில் மீட்டெடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.அவரோடு நட்புடனோ அல்லது பகையுடனோ.வாசிக்கும் போது நினைவில் நான் சந்தித்த மரணங்கள் வந்துக் கொண்டேயிருக்கிறது.வாசித்து முடித்ததும் மரணத்தை , ஒரு இழப்பை இப்படி உருவகப் படுத்த இலக்கியத்தால் மட்டுமே முடியுமென தோன்றுகிறது.

இன்னும் சில புத்தகங்கள் இருக்கின்றன,ஆனால் அவை அனைத்தும் நினைவில் இல்லை.அந்தப் புத்தகங்களுக்கு அருகிலும் நான் தற்பொழுதில்லை.ஆதலால் 2014 நான் வாசித்த நூலின் பற்றின பகிர்வுகளை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.


மற்றப் பதிவுகள்






Sunday, January 11, 2015

2014 - வாசிப்பு - தமிழ்மகன்

31.வெட்டுப்புலி 


தமிழ்மகன் எழுத்தில் நான் வாசித்த முதல் புத்தகம்.வெட்டுப்புலி தீப்பெட்டியை சிலர் பாத்திருக்கலாம் , அந்த தீப்பெட்டியின் மீது ஒட்டிருக்கும் படத்தினை பற்றின தேடலில் தான் இந்த நாவல் துவங்குகிறது.அந்தப் பரம்பரையில் வந்தவன் தான் இதை தேடுகிறான்.அவனது தேடல் வழியே இரண்டு தலைமுறைகளை சொல்கிறார்.சென்னை - செங்கல்பட்டு என கதை காலத்தால் ஏற்பட்ட இந்த நகரங்களின் மாற்றங்களை சொல்கிறது.அரசியல் மற்றும் சினிமாவின் வளர்ச்சியையும் சத்தமில்லாமல் சொல்கிறது.ஆரம்பத்தில் கதையில் ஏகப்பட்ட‌ கதாப்பாத்திரங்கள் நம்மை குழப்பினாலும் , போக போக நாவலுடன் பயணிக்க முடிகிறது.முக்கியமாக எனக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது பெரியார் பற்றின நிகழ்வுகள்.பெரியார் பின்பற்றியவரின் வாழ்வை சொல்வதன் மூலம் பெரியாரை பற்றி சொல்வது தான் ரசிக்க வைத்தது.பெரியார் வாழ்வினை தெரிந்துக்கொள்ளும் ஆசை வந்திருக்கிறது.வாசிப்பவர்களுக்கு கண்டிப்பாக தங்களது வாழ்வில் சந்தித்த தி.க நபர் வந்துச் செல்வார்.நமது கலாச்சாரத்தில் சாமியில்லை என சாதரணமாக சொல்ல முடியாது.அவர்கள் சந்திக்கும் இக்கட்டாண சூழ்நிலைகளை அழகாக சொல்கிறார்.குறிப்பாக துனைவியுடன் ஏற்படும் மனக்கசப்புகளை.

அதெயெல்லாம் வாசிக்கும் போது எனது தாத்தா தான் ஞாபத்தில்  வந்தார்.அவரும் திக தான்.சாமி கும்பிடுவதை வீட்டில் முற்றிலும் தடை செய்திருந்தார்.திருட்டுத்தனமாகத் தான் பாட்டி சாமி கும்பிடுவார்.அவர் கண்ணில் பட்டுவிட்டாள் அனைத்தும் வீட்டை விட்டு பறக்குமாம்.ஆனால் நாங்கள் இருந்தப் போதெல்லாம் கொஞ்சம் சாமி கும்பிடுவதை அனுமதித்துவிட்டார்.சாமி கும்பிடுவதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியாது , ஆனால் பாட்டியால் சாமி கும்பிடாமல் இருக்க முடியாது.வாசிக்கும் போதெல்லாம் இதே நினைவு தான்.என்னடா ஒரே தாத்தா புராணம் பாடுகிறான் என நினைக்க வேண்டாம்,நீங்களும் வாசித்துப் பாருங்கள் நீங்கள் எனைப் போல் இதேப் போன்று ஒரு புராணத்தை கண்டிப்பாக பாடுவீர்கள்.

இதை தவிற நான் ரசித்த ஒன்று , நாவலில் போகிற போக்கில் இரண்டு காட்சிகள் வரும்...சிறு வயதில் நான் அடிக்கடி கண்ட காட்சிகள் அது..கடைசி 10 வருடங்களில் அந்த காட்சிகளை நான் கவனத்ததில்லை...
1. தோடு , மூக்குத்திக்கு பதிலாக சிலர் ஈர் குச்சி குத்தியிருப்பார்கள்.சிறு வயதில் இந்த காட்சியை நான் அடிக்கடி பாத்திருக்கிறேன்...
2.கூரை வழியாக வெயில் தரையில் வட்டம் வட்டமாக விழும் காட்சி...
இது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லை என்ற போதும் , வாசித்ததும் அந்தக் காட்சிகள் மனதிற்குள் வந்து வந்து போனது...


32.ஆண்பால் பெண்பால் 


ஒரு வாசகனுக்கு புத்தகத்தின் முன்னுரை எந்த அளவிற்கு முக்கியமானது என்று எழுதுபவர்கள் யோசிப்பதுண்டா ?.முன்னுரையில் இலக்கணம் எனக்கு தெரியாது ஆனால் வாசகனாக நான் முன்னுரையில் எதிர்ப்பார்ப்பது புத்தகத்தின் பற்றின மெல்லிய அறிமுகத்தை மட்டும் தான்.ஆனால் அப்படிப்பட்ட முன்னுரை அரிதாகத்தான் வருகிறது.ஆசிரியரைப் பற்றியும் அந்தப் புத்தகத்தினைப் பற்றியும் ”மானே தேனே பொன்மானே” என நிரப்பியதாகத் தான் தோன்றுகிறது.
வாசிப்புப் பழக்கம் ஆரம்பமான நாட்களில் எனக்கு வெறும் முன்னுரை மூலம் அறிமுகமான புத்தகம் தான் எஸ்.ரா வின் துணையெழுத்து.அந்த முன்னுரை எனக்கு ஞாபகமில்லை ஆனால் அந்த முன்னுரை தான் என்னை அந்தப் புத்தகத்தை வாங்க வைத்தது என சொல்லலாம்.எனக்கு மிகப்பிடித்த புத்தகப் பட்டியலில் ஒரு முக்கியமான இடம் இந்தப் புத்தகத்திற்கு உண்டு.ஆனால் , அதன் பிறகு எந்த முன்னுரையும் என்னை ஈர்க்கவேயில்லை.
சில முன்னுரைகள் கதையின் முக்கியமான திருப்பங்களை போட்டு உடைத்துவிடுகின்றன.சில முன்னுரைகள் கதாப்பாத்திரங்களை விளாவாரியாக வர்ணிக்கின்றன.சில,படைப்பாளியை பாராட்டுவதிலே முடிந்துவிடுகிறது.கதையின் தளத்தையோ,கதையின் காலத்தை பற்றியோ,கதைக்குள் நுழைவதற்கு முன் கிடைக்க வேண்டிய அறிமுகத்தையோ அவை தருவதேயில்லை.முன்னுரைகளை பாதி நேரம் தவிர்க்கவே நேரிடுகிறது.
பா.சிங்காரத்தின் “புயலிலே ஒரு தோணி” என்ற புத்தகம்.அதன் முன்னுரை பக்கங்கள் பல செல்லும்.அந்த நாவலை படிப்பதற்கு நிறைய அறிமுகங்கள் தேவை.கூகுள் செய்தே அந்த நாவலைப் படித்தேன்.வாசிக்கும் பொழுது அந்தக் காலகட்டத்தின் தலைவர்கள்,கதை நடக்கும் நாட்டின் வரைப்படம் என அறிமுகங்கள் பல தேவைப்படும்.இந்தத் தகவல்களைப் பற்றி துளியும் பேசவில்லை அந்த முன்னுரை.உண்மையில் அந்த முன்னுரை எனக்கு சலிப்பையே ஏற்படுத்தியது.
முன்னுரையைப் பற்றின அபிப்பிராயமே எனக்கு மாறிவிட்டது.அது எழுத்தாளரை பாராட்டுவதற்காக பயன்படுத்தப்படும் இடமாகவே எனக்கு தோன்றியது.வாசகனாகிய எனக்கும் அதற்கும் எந்த உறவும் இருப்பதாகவே தோன்றவில்லை.முன்னுரை எழுதுபவரும் எழுத்தாளரும் பேசிக்கொள்ளும் இடமாகவே தோன்றியது.அப்படியிருந்த என் மன்நிலையை ஒரு முன்னுரை மிகவும் ஈர்த்துவிட்டது.படித்த முதல் சில வரிகளிலே வாசகனுக்காக எழுதியது என தோன்றியது.நான் அடுத்து படிக்க வேண்டிய புத்தகம் இதுவென மாற்றியது.தமிழ்மகனின் ஆண்பால் பெண்பால் நாவலின் முன்னுரை தான் அது.அந்த முன்னுரையை எழுதியது தமிழ்மகன் தான்.வாசகனை தன் வசம் இழுப்பதற்காகவே எழுதப்பட்டதாக அது அமைந்திருந்தது.கதையின் தளத்தையும் , கதாப்பாத்திரங்களையும், கதையின் சிக்கலையும் எந்தவித திருப்பங்களையும் உடைக்காமல் அறிமுகம் செய்கிறார்.கதையின் காலக்கட்டத்தையும் , கதைக்கு சம்மந்தமான சரித்திர தகவலையும் அறிமுகம் செய்து வாசகனை கைப்பிடித்து கதையின் வாசலிற்கு கொண்டு சேர்க்கிறார்.எனக்கு பிடித்த முன்னுரைகளில் கண்டிப்பாக இந்த முன்னுரை இடம்பெறும்.

Men are from Mars , Women are from venus என்று ஒரு புத்தகம் இருக்கிறது . திருமணம் நிச்சயம் ஆனதும் நண்பர் ஒருவர் பரிசாக தந்தது.என் மனைவியை புரிந்துக்கொள்வதற்காக,ஆனால் உண்மையில் எனக்கு அந்தப் புத்தகம் செம மொக்கையாக இருந்தது.இதை செய் அதை செய் என பெரும் அபத்தமாக தோன்றியது.தமிழ் மகனின் ஆண்பால் பெண்பால் புத்த‌கமும் இதே களத்தில் தான் பயணிக்கிறது ஆனால் மிகவும் சுவாரஸ்யமாக செல்கிறது.ஆனால் பிரிந்திருப்பவர்களின் கதை என்பதால் இதை திருமணம் நிச்சயமானவர்களுக்கு தர முடியாது என நினைக்கிறேன் , ஆதலால் அவர்களுக்கு அதே ஆங்கில புத்தகம் தான்.அவர்களை காப்பாற்ற யாராலும் முடியாதுப் போல.விவாகரத்து ஆன அவர்கள் தங்களது பிரிவை அவரஅவர் பார்வையில் பதிவது தான் இந்தக் கதை.அவர்களது கதையில் மிகவும் முக்கியமான ஒரு கதாப்பாத்திரம் எம்.ஜி.ஆர் . எப்படியென படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.சில இடங்களை வாசிக்கும் போது நமது ஈகோ எதிரே காட்சியாகும்.ஆசிரியரின் வெற்றி இதுவேயென நான் சொல்வேன்.முடிவை முன்னதாய் சொல்லிவிட்டு துவங்கினாலும் ஒரு சந்தோஷமான முடிவை எதிர்ப்பார்த்தே கடைசிப் பக்கத்தை புரட்டினேன்.ஆனால் ஆசிரியர் ஏமாற்றிவிட்டார்.



மற்றப் பதிவுகள்








Thursday, January 8, 2015

2014 - வாசிப்பு - இன்னும் சில‌

26.தாகூர் சிறுகதைகள் 


தாகூர் சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிறுகதைகளின் தொகுப்பு.இவரது கதைகளில் ஒரு கதாப்பாத்திரம் அதிகமாக வருகிறது.அது அவரது ஊரிலுள்ள நதி தான்.அந்த நதியின் போக்குவரத்துக்கள்.மெத்ராஸ் பட்டிணம் படத்தில் பார்த்ததுப் போல நதியினை மக்கள் தங்களது போக்குவரத்திற்கு உபயோகப்படுத்திருப்பதை நிகழ்வுகளாக அவர் சொல்லும் போது அதன் பிரமாண்டத்தை உணர முடிகிறது.அவருக்கும் அந்த நதியின் பாதிப்பு அதிகமாக இருந்திருக்கும் போல அதான் அவரது எல்லாக்கதைகளிலும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நதியினை குறித்து பேசுகிறார்.ஒரு கதையில் ஆத்தோரத்திலுள்ள ஒரு பெரிய கல் அதான் ஒரு கதையை சொல்கிறது , அதுவும் ஒரு விதவையின் கதையை.ஒரு பெண்ணின் வாழ்வை , நதியோடு அவளது சீண்டலை , அவளது துடிப்பை , அவளது ஆராவாரத்தை , இத்தனையுமின்றி நீண்ட பிரிவிற்கு பின் வாழ்வின் சோகத்தையும் தனிமையையும் மட்டும் சுமந்து அவள் வருகிறாள் , அந்தக் கல் அவளை மீண்டும் சந்தித்த சந்தோஷத்திலிருக்கு அவள் தனது வாழ்வின் முடிவை தேடிக்கொள்வாள் என முடிகிறது.கதையை யாரோ சொல்வதுப் போலவே இருக்கும் முடிவில் தான் அது அந்தக் கல் என்பதே தெரியும்.நான் மிகவும் ரசித்த சிறுகதை.

தாகூரின் படைப்புலகத்திற்கு ஒரு அறிமுகம் கிடைத்ததாக இருந்தது


27.லிண்ஷேலோகன் w/oமாரியப்பன் - வா.மணிகன்டன்


சிறு சிறு கதைகளாக 25 கதைகள் , ஒவ்வொரு கதைகளும் 2-3 பக்கங்களே.”வாமா மின்னல்..” என்பதை மனதில் வைத்துத் தான் மின்னல் கதைகள் என்று sub-title வைத்தாரோ என்னவோ..? கதை துவங்குவதும் , நம்மைக் கடந்து செல்வதும், முடிவதும் மின்னல் போல இருக்கிறது.இந்த மின்னல் கதைகள் வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்களுக்கும் படிக்க ஏதுவாக இருக்கும்.அப்போ வாசிப்புப் பழக்கம் இருக்கிறவர்களுக்கு எப்படி இருக்கும்னு நீங்க கேட்கிறது என் காதில் விழாமலில்லை…

சிறுகதைகள் வாசிக்கும் போது ,அந்தக் கதாப்பாத்திரங்கள் நம்முடன் பயணிப்பது போன்ற அனுபவம் இதில் சற்று குறைவாக எனக்குத் தோன்றியது.எனது பள்ளி,கல்லூரி நினைவுகளை தூண்டியபோதும் அத்துடன் பயணம் செய்யப் போதுமான இடம் இல்லாது போலத் தோன்றியது.

படித்து முடித்த இரு தினங்கள் ஆகிறது ,தற்பொழுது நினைவில் இருக்கும் கதைகள் என்று சொல்வதை விட மனதைத் தொட்ட சில கதைகள் என்று சொன்னால் அவை சரோஜா,துலுக்கன்,நீதானே என் பொன் வசந்தம், லிண்ஷேலோகன் w/o மாரியப்பன்,காமத் துளி (இன்னும் இருக்கு..எனக்கு பிடித்த முதல் 5 மட்டும் இவை) போன்ற கதைகள்.என்னிடம் பெஸ்ட் ஆஃப் மின்னல் கதையைத் தேர்வு செய்யச் சொன்னால்,நான் தேர்வு செய்வது ”சில்க் ஸ்மிதா” கதையாகத் தான் இருக்கும்.

2-3 கதைகள் சுவாரஸ்யமாக எனக்குத் தோன்றவில்லை.குறிப்பாக என்கவுண்டர் கதை.லூஸ் பால்ல ஏன் மனுஷன் 6 அடிக்காம விட்டாருன்னு தோனிச்சு.ஆனால் அதிகப்பட்சக் கதைகள் பட்டயைக் கிளப்பியது.அதுவும் கடைசிப் பத்துக் கதைகளில் எழுத்தின் முதிர்ச்சியை உணர முடிந்தது.


28.சொல்லவே முடியாத கதைகளின் கதை - ஆதவன் தீட்சண்யா


புரட்சிக்கரமான கதைகள் என்று சொல்லலாம் , கொஞ்சம் பகடியும் சேர்த்து.ஏரியும் பனிகாடு நாவலை ஒரு சிறுகதையாக சொன்னால் எப்படி இருக்கும் அதன் வலியை சிறுகதையில் கொண்டு வர முடியுமா..?முடியும் என்று சொல்கிறார் முதல் கதையில்.சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலுக்கு நாட்டின் அதிகப்பட்சம் சம்பளம் ஒரு நாட்டில் கொடுத்தால் அந்த நாட்டின் நிலைமை என்னவாகும் , ஒரு சின்ன கற்பனை தான்..அந்த கதையின் பகடி சற்று சுள்ளென்று இருக்கும்.அதேப்போல் கைபேசியை வைத்து ஒரு கதை அதிலும் பகடி ரசிப்பதாகவும் கொஞ்சம் உண்மையை சொல்லி நடு மண்டையில் கொட்டியதாகவும் இருக்கும்.அந்தப் புத்தகத்தின் கடைசி கதை - ரஞ்சித் என்ற கதாப்பாத்திரம் , வேறு யாருமில்லை பகத் சிங் தான்.நான் மிகவும் ரசித்த கதை.பகத் சிங் எழுதிய 4 புத்தகம் நமக்கு கிடைக்காமலே அழிந்து விட்டதாம்.அதை வைத்து ஒரு புனைவு.அந்த புத்தகம் கிடைப்பதுப் போல.படித்த முடித்ததும் அப்பாடா அந்தப் புக் கிடைத்தது , என்ன புக் என்று இணையத்தில் தேடியப்போது தான் அது புனைவு என்பதை தெரிந்துக் கொண்டேன்.ஒரு மிகப்பெரிய பொக்கிசியத்தை இழந்த வருத்தம் இன்னும் கொல்கிறது.அந்தக் கதையிக் ஏகப்பட்ட தகவல்கள் பகத் சிங் பற்றி,அவர் பேசிய வார்த்தைகளின் குறிப்புகளுடன் கதை செல்லும்.பகத் சிங் பற்றி தேடலுக்கு ஒரு தூண்டுதலாக இந்த கதை இருந்தது.இந்தக் கதை இணையத்திலும் கிடைக்கிறது.


29.யேசு கதைகள் - பால் சக்காரியா - தமிழில் - ஜெயஸ்ரீ



செம புத்தகம் , யேசுவை மையமாக வைத்து எழுதிய புத்தகம்.சில பல எதிர்ப்புகளை சந்தித்த புத்தகம்.நண்பர் இந்தப் புத்தகத்தைப் பற்றி சொல்லும் போதெல்லாம் எனக்கு ஆன்மீக சம்மந்தமாக புத்தகங்கள் மீது நாட்டமில்லை என சொல்ல நினைத்தேன்.ஆனால் இந்த கதையின் களங்கள் வேறு என்பதை அவர் மீண்டும் மீண்டும் என்னிடம் சொல்லும் போது புரிந்துக் கொண்டேன்.இது யேசு வின் புகழ் பாடும் புத்தகம் அல்ல . அதை விட முக்கியமான ஒரு விஷயத்தை இந்தப் புத்தகம் விவாதிக்கிறது .யேசு ஒரு சாதாரண மனிதனாகவும் வாழ்ந்து இறந்திருக்கலாம் , காலம் தனது தேவைகளுக்காக அவரை கடவுளாக மாற்றியிருக்கலாம் என்ற விவாதம் தான் அது.யேசு முதன் முதலாக கண்ணாடியை பார்த்து சவரம் செய்வதாக ஒரு கதை , மிகவும் ரசித்து படித்த கதை.அதைப் போல் ஒரு யேசுவின் சிலை (பொம்மை) ஒரு விறகு கடையில் கிடைக்கிறது,அதை யாரும் மதிக்கவில்லை என்றே சொல்லலாம்.அதற்கு முக்கியமாக ஒரு காரணத்தை கதையில் சொல்கிறார்,அதில் யேசு சிரிப்பதாக இருக்கிறது அதான் அந்த சிலையை யாரும் கண்டுக்கொள்ளவேயில்லை இங்கு அனைவருக்கும் யேசுவின் பாவப்பட்ட முகம் தான் தேவை என்று வருகிறது.சற்று யோசிக்க வேண்டிய விஷயம் தான் .இந்தப் புத்தகத்தின் பற்றிய ஒரு அறிமுகம் தி.ஹிந்துவில் வ‌ந்திருக்கிறது.வாசித்துப் பாருங்கள்


30.கோபல்ல கிராமம் - கி.ரா




ரொம்ப நாளாக எனது அலமாரியில் உறங்கிக் கொண்டிருந்த புத்தகம் தான் கோபல்ல கிராமம்.நீண்ட முன்னுரை படித்தலிருந்து , இந்தப் புத்தகத்தை படிக்க தொடர்ந்து நேரம் கிடைத்தால் தான் முடியும் என்ற‌ பிம்பம் மனதில் உருவாகியிருந்தது . அப்படியொரு நேரம் கிடைக்குமென , "உனக்கு அடுத்த முறை நல்ல சம்பள உயர்வு வாங்கித் தரேன்" என மேனஜரின் சொல்லை நம்பி அடுத்த முறைக்காக காத்திருக்கும் ஐ.டி இளைஞன் போல நானும் காத்திருந்தேன்.அந்த நல்லவிதமான அடுத்த முறை வரவேயில்லை.பொறுத்தது போதுமென சென்ற வாரம் கையில் இந்தப் புத்தகத்தை எடுத்துவிட்டேன்.ஏகப்பட்ட கதாப்பாத்திரங்களின் அறிமுகங்கள் ,ஆரம்பத்தில் சற்று தடுமாற வைத்தது.முதல் சில பக்கங்களில் ஏகப்பட்ட தெரியாத வார்த்தைகள் வேறு.சரி இதுவும் கடந்து போகுமென பட்டியலை மட்டும் குறித்துவைத்துவிட்டு தொடர்ந்த வாசிப்பு போகப்போக ரெக்கை கட்டிப் பறந்தது.கதாப்பத்திரங்களின் பிம்பங்களோடு கிராமத்தை கண்டிப்பாக நம் கண்முன்னை வார்த்தைகளின் வழியாக வரைந்து விடுகிறார் கி.ரா.நாம் அறியாமல் புன்னைகை சிந்தும் இடமும் உண்டு கண்களை கசங்க வைக்கும் இடமும் உண்டு.கதையினை பற்றி சொல்லாமல் இந்நாவலை மேலும் விவரிப்பது சிரமம் என்பதால் எனக்குப் பிடித்த சில வரிகளையும் , வார்த்தைகளையும்  இங்கே பகிர்கிறேன்.....

//
அவர்கள் சூரியோதத்தைப் பார்த்ததும் அப்படியே நின்று விட்டார்கள்!இந்தச் சூரியோதயம் ஒன்றை எத்தனை தரம் பார்த்தாலும் சலிப்பதில்லை,அது ஒருநித்தப்புதுமை,அன்றலர்ந்த மலர்போல.இந்த கண் கூசாத சூரியனை,பூப்படையாத மங்கையைப் பார்ப்பது போல கூசாமல் பார்க்கலாம்.!
//

//
கோபல்ல கிராம‌மும் சுற்றுப்புறமும் கும்பினியின் ஆட்சிக்குக் கீழே வந்து பல வருஷங்கள் ஆகியும் எந்தவித மாறுதலும் உண்டாகிவிடவில்லை.மாறுதல் என்று ஒன்றைச் சொன்னால்வேண்டுமானால் அப்போது ஆகாயத்தில் தோன்றிய வால் நட்சத்டதிரத்தை வேண்டுமானல் சொல்லலாம்.
//

ருசிக்கல் - சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு உப்பு என்று சொல்ல கூடாதாம்.

அத்தாளம் -  dinner desserts

அரவ தேசம் - தமிழ்நாடு

ஏணி நாற்காலி - படிவைச்ச ஸ்டூல் [நீளமுள்ள‌ கூந்தலை உணர்த்திக்கொள்ள உதவும்]

நல்ல நாவல்.வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக படிக்கவும்.



மற்றப் பதிவுகள்



Tuesday, January 6, 2015

2014 வாசிப்பு - வலிகள்

ஒருவரது வலியை மற்றொருவருக்கும் உணரச்செய்வதில் இலக்கியத்திற்கு ஒரு முக்கிய பங்குண்டு..அப்படி 2014 ல் நான் வாசித்ததில் வலிகளை பேசிய படைப்புகளைப் பற்றி, 


22.எரியும் பனிக்காடு - பி.எச் டேனியம் [தமிழில் - இரா-முருகவேள்]


Red Label என்ற ஆங்கில நாவலின் மொழியாக்கம் தான் இந்த நாவல் ,  மிக முக்கியமான புத்தக‌ம் . நாம் அன்றாடம் அருந்தும் தேநீரின் கதை இது.பாலாவின் பரதேசி படம் இந்த நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான்.நான் படம் பார்க்கவில்லை , ஆனால் ஒரு பாட்டு பாத்தேன்.என்னால் அந்த பாட்டை நாவலின் எந்த இடத்திலும் வைத்து பார்க்க முடியவில்லை. 12  years a Slave  என்று ஒரு ஆங்கில திரைப்படம் .செம படம்.அந்த படத்தின் ஒவ்வொரு காட்சியிலையும் இந்த நாவலைப் பார்க்க முடிந்தது .டீ எஸ்டேட்டில் எப்படி வேலைக்கு ஆட்களை பிடித்து வருகின்றனர் என்பதில் துவங்குகிறது நாவல்.கங்கானி என்று சொல்லப்படுபவர்கள் தான் இந்த வேலையை செய்கின்றனர்.இந்த கங்கானிகள் கதாப்பாத்திரங்களை எந்த துறையிலும் பொருத்திப்பார்க்க முடியும்.நாயகனும் நாயகியும் இதுப் போன்ற ஒரு கங்கானியை நம்பி தங்கள் இடத்தினை விட்டு புறப்படுகின்றனர்.பஞ்சமும் , வேறு வேலைவாய்ப்பின்மையும் அவர்களை இந்த முடிவை எடுக்கச் செய்கிறது.எப்படியும் சம்பாதித்து விரைவில் கை நிறைய பணத்துடன் ஊருக்கு திரும்பிடலாம் என்ற நம்பிக்கையா போனவர்களுக்கு அங்கு சென்ற பின்பு தான் உண்மை நிலவரம் மெல்ல மெல்ல புரிகிறது.நாம் அருந்தும் தேனீர் பின்னாடி இப்படி ஒரு கதையிருக்கும் என சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. இதுப் போன்ற உடல் ரீதியான,பண ரீதியான துயரங்கள் இல்லாவிட்டாலும் நான் ஐ.டி துறையில் இருப்பதாலோ என்னவோ இந்தத் துறையினை நாவலின் ஒவ்வொரு வலி மிகுந்த இடத்திலும் பொருத்திப்பார்க்க முடிந்தது.முக்கியமாக‌ நாவலில் ஒரு இடத்தில் பரித்த தேநீர் இலைகளை இடை போடும் காட்சி வரும் அது எனது துறையில் நடக்கும்  "performance appraisal" ஐ நினைவிற்கு கொண்டு வந்தது. எவ்வளவு தூரம் பிழிய முடியுமோ பிழிந்தெடுத்துவிட்டு , முடியாது என்ற கட்டம் வரும்போது திறமையற்றவர் என‌ சொல்லி வெளியில் அனுப்புவது ஐ.டி துறையில் அவ்வப்போது நடந்துக் கொண்டே இருக்கிறது.இந்த நிலை நாவல் படிக்கும் போது காட்சிகளாக மனதில் சுற்றிக் கொண்டேயிருந்தது.நாவல் வாசிக்கும் போது அந்த நிலப்பரப்பின் குளிரையும் அந்த மக்கள் மனதில் எரியும் நெருப்பையும் நன்கு உணரலாம்.


23.நிமித்தம் - எஸ்.ரா


ஒரு பயணத்தில் தனது 6ம் வகுப்பு நண்பனை காண்கிறார் , அவர் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்."என்னடா " என்று கேட்க , தனது காது கேளாத பிரச்சனைத் தான் இந்த நிலைக்கு காரணம் என சொல்கிறார்...காது கேளாமை இவ்வளவு தூரம் ஒருவரின் வாழ்வை மாற்ற முடியுமா..? இந்த கேள்விக்கான விடை தேடலே நிமித்தம் நாவலாக உருமாறியிருக்கிறது.தேவ்ராஜ் என்ற கதாப்பாத்திரம் மூலம் காது கேளாதவர்களின் வலியை உர‌க்க சொல்லியிருக்கிறார்.இதில் காது கேளாமைத் தவிர , தாமதமாக திருமணமாகும் ஒருவனின் வலியும் இருக்கிறது.குறைந்த வயதை நிர்ணயம் செய்தவர்கள் , அதிகப் பட்ச வயதை நிர்ணயம் செய்யாதது ஏன்..என்ற கேள்வி சமுதாயத்தில் ஒரு பெண்ணிற்கு திருமணம் ஆகாதப் போது அவளை பாவப்பட்ட ஜென்மம் என்றாவது நினைப்பார்கள் ஆனால் ஆணிற்கு அதுவும் இல்லை என்பதே நிதர்சனம்.காது கேளாத ஒருவனது வாழ்க்கை தான் இந்த நாவல்.அவனை இந்த சமூகம் எப்படியெல்லாம் பந்தாடுகிறது , அவனது வலியை நமது செவிக்கு எட்டவைத்திருக்கிறார் எஸ்.ரா.

எஸ்.ராவின் எழுத்துக்கள் எனக்கு எப்போதும் நண்பன் தோழ் மீது கைப்போட்டு பேசுவதுப் போலவே இருக்கிறது,அவரது எழுத்தின் எளிமை எனக்கு மிகவும் ஒத்துப்போகிறது என்றே சொல்லலாம்.

24.கள்ளம் - தஞ்சை பிரகாஷ்


தஞ்சாவூர்காரனாக இருந்தும் தஞ்சை பிரகாஷ் பற்றி இணையத்தில் படித்துத் தான் தெரிந்துக் கொண்டேன்.அவரது எழுத்துக்கள் அதிகம் அச்சில் இல்லையாம்,கள்ளம் நாவல் போன வருடம் மறுப்பதிப்பாக வந்தது.உடனே வாங்கிவிட்டேன்.தஞ்சை ஓவிய கலை தான் கதையின் மையம்.தஞ்சை ஓவியம் எப்படி உருவானது , அந்த சமூகம் பற்றின அறிமுகம் முன்னுரையிலே ஆசிரியர் தந்து விடுகிறார். நாவல் தஞ்சை அரண்மனையிலே துவங்குகிறது . நாயகன் தஞ்சை ஓவிய கலை பின்னனியில் வந்தவன் , ஆனால் அவனுக்கு எந்த வித புதுப்பிதலும் இல்லாமல் வெறும் tempalte ஆக ஓவியம் தயாரிப்பதில் நாட்டமில்லாமல் அதை எதிர்க்கிறான்.அதிலிருந்து அவனது பயணம் துவங்குகிறது.கதை அதிகமாக பூக்கார வீதியிலே நடக்கிறது.தஞ்சையின் முக்கியமான இடங்களில் ஒன்று.அங்குள்ள மக்களுடன் நாயகன் சேர்கிறான் , அவர்களின் துனைகொண்டே கலைக்கு புது உருவம் தருகிறான்.அதற்கு அவன் கையாளும் முறை ... அதை நாவல் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.இதில் நாயகனின் ஒரே வலி , கலை தான் ... அவன் உயிரோட்டமில்லாமல் அப்படியே நகலாக உருவெடுப்பதை பார்க்கும் போதெல்லாம் தவிக்கிறான்.அவனது தவிப்பே இந்த நாவல்.கலையோடு உறவுகளையும் அதுகம் கையாண்டிருப்பார்.சில இடங்கள் சினிமா தனமாக தோன்றினாலும் வாசிக்கும் போது சுவாரஸ்யமாகவே இருந்தது.

25. மாதொருபாகன் - பெருமாள்முருகன்



பெருமாள் முருகன் எழுத்தில் நான் படிக்கும் முதல் நாவல்.பாதி வாசிப்பில் இருக்கும் போதே , நாவல் பற்றின பிரச்சனை செய்தி எட்டியது.அந்த விஷயத்தை முன்னுரையிலையே சொல்லிவிடுவார்.அதை மற்றும் படிச்சிட்டு பிரச்சனை செஞ்சாங்களான்னு தெரியல.இந்த நாவல் வேறு விஷயத்தை தான் பேசுகிறது.அது என்னான்னா குழந்தையில்லாமல் இருக்கும் ஒரு தம்பதியின் வலி தான்.அதில் இந்த பிரச்சனைக்குறிய விஷயம் ஒரு திருப்பமாக வரும்...

திருமணம் ஆனதும் "என்ன ஏதாச்சும் விஷேசம் உண்டா" என்ற கேள்வி இங்கு திருமணம் ஆன அனைவரும் எதிர்கொள்ளும் கேள்வி தான்.இதுப் போன்ற கேள்விகள் தான் நம் வாழ்க்கையை நடத்துகிறதோ என்ற சந்தேகம் கூட அடிக்கடி வருவதுண்டு.10 வது மார்க்,+2,எந்த காலேஜ்,campus,இன்னும் வேலை கிடைக்கலையா,அவன் அவ்வளவு சம்பளம் வாங்குறான்,வெளிநாடு,திருமணம்,முதல் குழந்தை,சொந்த வீடு,கார்,ஆண் வாரிசு..என கேள்விகள் வந்துக் கொண்டேயிருக்கிறதுஏதாச்சும் ஒரு கேள்விக்கு +ve ஆக பதில் சொன்னால் அடுத்த கேள்விக்கு தாவி விடுவார்கள்.ஆனால் -ve ஆக பதில் சொன்னால் அவ்வளவு தான்,அதே கேள்வியை திரும்ப திரும்ப கேட்டு வாழ்வை ரணமாக மாற்றுவதில் இந்த சமூகம் ஆர்வம் காட்டும் பாருங்க...அப்படி தான் இங்கு குழந்தை இல்லாத போதும் தங்களுக்குள் பிரச்சனை இல்லாததாக உணர்ந்த வந்த தம்பதியர் வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் ஏதோ ஒரு நிகழ்வில் அந்த வருத்தம் ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது.அதை ஏற்படுத்துவதே அந்த சமூகத்தின் முதல் கடமையாக இருந்தது.

இந்த நாவலில் வரும் கணவன் - மனைவிக்குள் இருக்கும் ஈடுபாடை,காதலை,காமத்தை அழகாக ரசிக்கலாம்.நாயகனின் அறிமுகமே ஒரு பூவரச மரத்தடியில் (அவனது மாமியார் வீட்டில்) அவனது சோம்பலான விழிப்புடன் துவங்குகிறது...நேரத்தை கடத்த முயன்று அவன் மெல்ல மெல்ல தனது நினைவுகளை ஓட்டுகிறான்.
குழந்தையில்லாத காரணத்தால் அவன் சந்தித்த அவமானம் மட்டுமே அவனது நினைவில் அதிகம் இருக்கிறது.குழந்தையின்மை - எவ்வளவு பெரிய பூதமாக தங்களுக்குள் இருப்பதையும் , தங்களது கூடல் கூட மகிழ்ச்சிக்கரமாக அமையாது பயத்துடன் இருப்பதை நினைத்து வாடுவதை என்னவென்று சொல்வது...

நாவல் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தினுடையது , திருச்சங்கோட்டில் நடக்கிறது , அங்கிருக்கும் வழிபாட்டு முறைகளையும் , வேண்டுதலையும் சொல்லி நகர்கிறது.அங்கு நடக்கும் திருவிழா , அப்பொழுதைய நடப்பில் இருக்கும் சில முறைகளை இந்த கதைக்கு முக்கிய திருப்பமாக உபயோகித்திருக்கிறார்.வாசிக்கும் போது அது ஒரு ஆச்சரியம் தருவதாக இருந்ததைத் தவிர பெறும் கலாச்சார அவமானமாக தோன்றவில்லை எனக்கு.

நாவலின் அடுத்த இரண்டு பகுதிகள் வருகிறதான் (12 B style ல் என்று கேள்வி).....


மற்றப் பதிவுகள்


Saturday, January 3, 2015

2014 வாசிப்பு - வரலாறு







இந்தப் பதிவுகளை தொடர்ந்து....

“அப்பாடா இனிமே வரலாறு பக்கமே போக தேவையில்லை”, பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்ததும் எனக்கு மனத்தில் தோன்றியது இதுதான். அந்த அளவிற்கு வரலாற்றுடன் எனக்குத் தகராறு. சமீபகாலமாக வாசிக்கும் பழக்கம் மெல்ல மெல்ல வளரத் துவங்கியது. அதுவே என்னை வரலாற்றின் பக்கம் இழுத்தும் சென்றது. அப்படி வரலாற்று சம்மந்தமான நான் படித்த சிலப் புத்தகங்கள் பற்றி..

17.இந்தியப் பிரிவினை - மருதன் 


பிரிவினையால் ஏற்பட்ட பாதிப்புகள் என்னென்ன எவ்வாறு பிரிக்கப்பட்டது மற்றும் பிரிவினையில் ஜின்னா, நேரு, மவுண்ட் பேட்டன் போன்ற தலைவர்களின் நிலை என மூன்று தளங்களில் இந்த புத்தகம் பயணிக்கிறது.Mad House: இதுதான் இந்தியப் பிரிவினையின் பொறுப்பை மவுண்ட்பேட்டனிடம் ஒப்படைக்கும்போது சொல்லப்பட்ட வார்த்தைகள். அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் துவங்கிய புத்தகம் மெல்ல மெல்ல பிரிவினையின் ஆரம்பப் புள்ளிக்கு நம்மை இழுத்துச் செல்கிறது. காங்கிரஸ் எவ்வாறு எதற்காகத் துவங்கப்பட்டது, எந்த சூழ்நிலையில் எப்பொழுது யாரால் பாகிஸ்தான் எனும் தனி நாடு கோரிக்கை வைக்கப்பட்டது, ஜின்னா ஏன் தனது கோரிக்கையில் உறுதியாக இருந்தார் என நகர்கிறது. ஒரு கட்டத்தில் காந்தி “ஏன் இரண்டாக பிரிக்க வேண்டும், முஸ்லீன் லீகிடமே இந்தியாவை ஒப்படைத்துவிடலாம்” என்றாராம். காந்திக்கு பிரிப்பதில் கடைசிவரை விருப்பம் இருந்ததேயில்லை. பிரிவு என்ற முடிவு வந்ததும் இங்கு கலவரங்கள் வெடிக்கும் என்ற பயம் அவருக்கு மட்டுமே இருந்தது. ஏனோ ஜின்னாவிற்கும் நேருவிற்கும் அப்படி தோன்றவில்லை. சுதந்திரப் போராட்டம் பற்றிய நிகழ்வுகள் பள்ளிப் பாடங்கள் மூ
லமாகவும் சில‌ திரைப்படங்களின் மூலமாகவும் மட்டுமே நம்மிடம் பதிந்திருக்கிறது. நம்மை சுற்றி தகவல்கள் நிறைந்திருக்கிறது, அதைத் தேடும் ஆர்வம் மட்டும் தான் இங்கு குறைவாக இருக்கிறது, அப்படி ஆர்வம் ஏற்படும் போது அதைத் தூண்டிக்கொண்டே இருத்தல் வேண்டும் பசியைத் தூண்டும் starters போல. அப்படி எனக்கு அமைந்த starters தான் இந்தப் புத்தகம்.

இந்தப் புத்தகம் பற்றி மதிப்புரை தளத்தில் வெளியான எனது கட்டுரை. இங்கே.


18.குஜராத் 2002 கலவரம் - சரவண‌கார்த்திகேயன்



குஜராத் என்றதும் நினைவிற்கு வருவது காந்தி, மதுவிலக்கு, பூகம்பம், மோடி மற்றும் 2002 கலவரமுமாகத்தான் இருக்கும். அந்தக் க‌லவரத்திற்கு அடித்தளமாக‌ அமைந்ததுதான் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம். 2002 ல் நடந்தது கலவரம் அல்ல அது திட்டமிட்ட இன ஒழிப்பு என்ற நடுநிலை ஆய்வாளர்களின் கருத்துடன் இந்தப் புத்தகம் துவங்குகிறது.இந்தக் கலவரத்தில் வன்முறையாளர்களின் தீவிரங்களை அறிவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அரசின் மெத்தனம். விசாரிப்பின்போது அவர்கள் சொல்லும் காரணம், போதுமான போலிஸ் இல்லை, அதிகாரம் இன்னும் கிடைக்கவில்லை போன்றவை. அகமதாபாத் குல்பர்க் சொசைட்டி, பெஸ்ட் பேக்கரி, காந்தி நகர் என வெவ்வேறு இடங்களில் நடந்த கலவரங்கள். உமர்ஜி ஹீசைன், மூத்த காங்கிரஸ் தலைவர் இஷான் ஜாஃபிரி போன்ற தலைவர்களின் நிலையே கேள்விகுறியானது. உதவிய சில நல்லுள்ளங்கள், கலவரத்தில் பெண்களின் ஈடுபாடு என இந்தப் புத்தகம் நகர்கிறது.சில பத்திரிக்கைகளின் மூலம் கலவரங்கள் தூண்டப்பட்டிருக்கிறது. ஆனால் வேறு சில பத்திரிகைகளின் மூலம்தான் இந்தக் கலவரத்தின் உண்மையான விவரம் வெளியுலகத்திற்கே வந்திருக்கிறது. தருண் தேஜ்பாலின் பத்திரிகை நடத்திய ரகசியப்  புலனாய்வு “The Truth : Gujarat 2002″ வெளியானது. இதுபோன்ற வேறு சில குழுக்கள் செய்த விசாரனை பற்றியும், அவர்களை மீட்க போராடியவர்கள் பற்றியும் என அனைத்தையும் பற்றி இந்தப் புத்தகம் பேசுகிறது. சம்பவம் சார்ந்த சில ஆவணங்களும், தகவல்கள் திரட்ட உதவிய இணையத்தளங்கள், புத்தகங்கள், திரைப்படங்கள் என இறுதியில் இணைக்கப்பட்டப் பட்டியல் வாசகரின் தேடலுக்கு உதவியாக இருக்கும்.

இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது மதம் பிடித்த யானையின் பிடியில் சிக்கி மாண்டு போகும் பாகனின் உருவம் நினைவிற்கு வருகிறது. ஏனென்று தெரியவில்லை.


இந்தப் புத்தகம் பற்றி  மதிப்புரை தளத்தில் வெளியான எனது கட்டுரை. இங்கே.


19.மெளன வசந்தம் - ரேச்சல் கார்சன்  [ தமிழில் - பூவுலகின் நண்பர்கள்]


Silent Spring என்ற ஆங்கிலப் புத்தகத்தின் மொழிப்பெயர்ப்பு மற்றும் சுருங்கிய வடிவமே இந்தப் புத்தகம்.ரேச்சல் கார்சன் பற்றியும் அவரது படைப்பும் (ஆங்கிலத்தில்) இந்தத் தளத்தில் கிடைக்கிறது.நந்தா படத்தின் கடைசி காட்சி ஞாபகம் இருக்கா,விஷத்தை சோத்துல கலந்து மகனுக்கு தர கொடூரமான‌ காட்சி.அந்தக் காட்சி தான் இப்போ நம்ம வீட்டிலும் நடந்துக் கொண்டிருக்கிறது(கொஞ்சம் மாறுதலுடன்) என‌ முதல் முதலில் இந்த உலகத்திற்கு எடுத்துரைத்த புத்தகம் தான் Silent Spring .நம்ம நம்மாழ்வாரின் கட்டுரை மூலமே  எனக்கு இந்த புத்தகம் அறிமுகமானது.
இந்த புத்தகம் பூச்சி மருந்துக்களின் ஆபத்து பற்றியும் ,பூச்சிகளிலிருந்து விளைச்சலை காப்பாற்ற‌ மாற்று வகை முறைகளின் அவசிய‌த்தையும் உணர்த்துகிறது.அமெரிக்க மண்ணில் தடை செய்யப்பட்ட சில பூச்சிக்கொள்ளி மருந்துக்கள் ஏற்றுமதிகளுக்கு அனுமதிக்கப்படுகிறதாம்...இந்த வரி படித்ததும்..வடிவேலுவின் வசனம் தான் ஞாபகம் வந்தது.."உங்களுக்கு வந்தா இரத்தம் , எங்களுக்குனா தக்காளி சட்டினியா"...

இந்தப் புத்தகத்தில் வரும் சில வரிகள்..
இம்மாதிரி விஷயங்களை யார் தீர்மானித்தது?மரணத்தை பரப்பும் இந்த நடவைக்கையை யார் அங்கீகரித்தது?தராசில் ஒரு தட்டில் வண்டுக்கள் தின்றழிக்க கூடிய இலைகளையும் அடுத்த தட்டில் விஷத்தால் இறந்த பறவைகளின் உடல்களையும் யார் வைத்தது,சடசடக்கும் சிறகு ஒலிகள் இல்லாத ஒரு உலகம் தான் மனிதனின் இறுதி இலட்சியம் என்று யார் தீர்மானித்தது?வசந்தத்தை மெளனமாக்கியே தீருவேன் என்று முடிவு செய்தது யார்?இதில் சாதாரண மனிதனின் பங்கென்ன?
இதில் சாதாரண மனிதனின் பங்கென்ன?

விடை தெரியாமல் தான் தவித்துக் கொண்டிருக்கிறோம்...வேறென்ன சொல்ல..


இந்தப் புத்தகத்தின் முழு மொழிப்பெயர்ப்பும் கிடைக்கிறது.


20.கனவுகளின் விளக்கம் - சிக்மென்ட் ஃப்ராய்ட் [தமிழில் - நாகூர் ரூமி]


இது முழு தமிழாக்கம் அல்ல , interpretation of dreams என்ற புத்தகத்தின் அறிமுகமே.ஃப்ராய்ட் என்பவர் யார் , அவர் மருத்துவ துறையில் என்ன செய்தார்.அவருடைய புத்தகம் என்ன சொல்கிறது.உலகினை மாற்றிய புத்தகம் என சொல்வதெற்கு காரணம் என்ன? இந்த கேள்விகளுக்கு விடையாக இந்தப் புத்தகம் இருக்கும்.அதிகாலை கனவு பலிக்கும்  , கனவில் பாம்பு வந்தால் நல்லதோ கெட்டதோ நடக்கப் போகிறது.இதுப் போல நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம்.நமது கலாச்சாரத்தில் கனவு என்பது எதிர்காலத்தின் குறியீடாகவே பார்த்திருக்கிறோம்.ஆனால் இவர் எல்லாமே(அதிகப் பட்சமான கனவுகளை) மனதில் பதிந்திருக்கும் காம ஆசையை வைத்துச் சொல்கிறார்.அதற்கு சில எதிர்ப்புகளும் இருக்கிறது.ஒரு பெண் தனது கனவில் ஒரு கண்ணாடி மேஜையின் மேல் ஒரு கேக் இருப்பதையும் அதில் மூன்று மலர்கள் இருப்பதையும் காண்கிறாள்,அதனைக் கூட அவளோட திருமண ஆசையால் வந்தது என விளக்கம் சொல்கிறார்.இதுப் போல பல விளக்கங்கள் உள்ளது.சில விளக்கங்கள் ஏற்றுக்கொள்ள முடியாததுதாக இருக்கும்.இருந்தும் சவாசிக்கும் போது அதை தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் தொடர்ந்துக் கொண்டேயிருக்கும். வாய்ப்புக் கிடைத்தால் முழு மொழிப்பெயர்ப்பையும் படிக்க வேண்டும்.

21.எனது இந்தியா - எஸ்.ரா



மிக முக்கியமான புத்தகம் . இந்தியாவின் வரலாற்று நிகழ்வுகளை சுவாரஸ்யமாகவும் , சில அரிய தகவல்களுடனும் சொல்லியிருப்பார் எஸ்.ரா. சில கட்டுரைகள் இணையத்திலும் கிடைக்கிறது.பொறுமையாக படிக்க வேண்டிய புத்தகம்.காந்திக் கொலை வழக்கு , செண்பக ராமன் , அக்பர் , திப்புசுல்தானின் வாரிசு,வாஞ்சிநாதன்,ஜாலியன் வாலாபாக் சம்பவத்திற்கு பலி வாங்க லண்டன் வரை சென்றவர் பற்றின தகவல்கள்,மலேரியா காச்சல் வந்த போது ஆங்கில‌ அரசு எப்படி நடந்துக் கொண்டது,புலிகளின் வேட்டை,சில‌ கொள்ளையர்கள் பற்றின தகவல்கள், உப்புக்காக நடந்த போராட்டம் என நீண்ட பட்டியல் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.சிறுவர்களுக்கும் படித்துக்காட்டி வரலாற்றின் மீது ஆர்வத்தை தூண்ட இந்தப் புத்தகம் உதவும்.இதன் தொடர்ச்சியாக மறைக்கப்பட்ட இந்தியா என்ற புத்தகம் வந்திருக்கிறது.

மேலும் தொடரும்...

Friday, January 2, 2015

புத்தகம் : குஜராத் 2002 கலவரம்

(மதிப்புரை தளத்தில் வெளியானது) 

சிறுவயதில் எனக்கு ரயில் எப்பொழுதும் ஆனந்தத்தின் குறியீடாகத்தான் இருந்திருக்கிறது. முதல் ரயில் பயணம் இன்றும் நினைவில் உள்ளது. பயணச் சீட்டு கொடுக்குமிடம், ரயிலுக்காக காத்திருக்கும் தருணம், ஜன்னல் வழியே தெரியும் காட்சிகள் என ஒவ்வொன்றும் அழகாகத் தோன்றியது. ஆனால் ரயில் என்பது மதக்கலவரங்கள் மற்றும் தீவிரவாதத் தாக்குதல்களின் தளமாக‌ இருப்பது இந்திய வரலாற்றை எட்டிப் பார்க்கும்போதுதான் புரிகிறது. இந்தியப் பிரிவினையின்போது இரு நாட்டிற்கும் இடையே பயணித்த உயிரற்ற உடல்கள், மும்பை ரயில் குண்டு வெடிப்பு, கோத்ரா ரயில் எரிப்பு என பட்டியில் ஒன்று நம்மை அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது.
குஜராத் என்றதும் நினைவிற்கு வருவது காந்தி, மதுவிலக்கு, பூகம்பம், மோடி மற்றும் 2002 கலவரமுமாகத்தான் இருக்கும். அந்தக் க‌லவரத்திற்கு அடித்தளமாக‌ அமைந்ததுதான் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம். 2002 ல் நடந்தது கலவரம் அல்ல அது திட்டமிட்ட இன ஒழிப்பு என்ற நடுநிலை ஆய்வாளர்களின் கருத்துடன் இந்தப் புத்தகம் துவங்குகிறது. அத்துடன் ஆசிரியர் வாசகருக்கு எச்சரிக்கை ஒன்றையும் முன்வைக்கிறார். அது, “இந்தப் புத்தகம் இந்து மதம் அல்லது நரேந்திர மோடிக்கு எதிரான அல்லது காங்கிரஸூக்கு ஆதரவானது அல்ல. ” இந்த எச்சரிக்கையை மனத்தில் கொண்டு வாசிப்பது அவசியமானது. 
குஜராத் நகரத்தின் வரலாறு, இந்து- முஸ்லீம் இடையே வெவ்வேறு காலத்தில் ஏற்பட்ட கலவரங்கள், ஆர். எஸ். எஸ்ஸின் வளர்ச்சி பற்றின மெல்லிய அறிமுகங்கள் போன்றவை வாசகரின் தேவையறிந்து பகிரப்படுகிறது. குஜராத் 2002 கலவரத்திற்கு ஒரு துவக்கப் புள்ளியாக இருக்கிறது கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம். சபர்மதி ரயிலில், அயோத்தியில் யாகம் ஒன்றை முடித்துவிட்டு 2000 க்கும் மேலான இந்துக்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். வரும் வழியில் சக முஸ்லீம் பயணிகளுடன் சில தகராறுகள் நடந்திருக்கின்றன. கோத்ரா நிலையத்திற்கு மிகவும் தாமதமாகத்தான் ரயில் வந்தது. அந்தப் பகுதி முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதி, அங்கு இருக்கும் முஸ்லீம் வியாபரிகளிடனும் தகராறு நடந்திருக்கிறது. ஆதலால் பதட்டமான சூழ்நிலை உருவாகி, ரயிலின் மீது கல் எரிதல் நிகழ்வும் நடந்துள்ளது. ரயில் கிளம்பியும், ரயிலின் சங்கிலி அடிக்கடி பிடித்து இழுக்கப்பட்டதால் சங்கிலியால் கட்டப்பட்ட யானை போல் ரயில் நகரமுடியாமல் தவித்தது.
ரயிலின் சங்கிலி பலமுறை இழுக்கப்பட்டு நிலையத்தைத் தாண்டி நிற்கிறது. அப்பொழுது இரண்டு பெட்டிகளில் திடிரென தீ பரவுகிறது. யார் வைத்தது, எப்படி பற்றியது என இதுவரை ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. ஆனால் அப்பொழுதே உடனுக்குடன் சில உள்ளூர்ப் பத்திரைக்கைகளில் முஸ்லீம்கள்தான் செய்தனர் என்றும்,  பெண்கள் மீதும் அவர்கள் வன்முறை நடத்திருக்கின்றனர் என்றும் செய்திகள் வெளிவந்தது. மழைக்காகக் காத்திருந்த காளான் போல வன்முறை ஊரெங்கும் முளைக்கத் துவங்கிவிட்டது. ஆனால் அந்த காலான்களுக்கு எந்த இடத்தில் முளைக்க வேண்டும் என்பது நன்கு தெரிந்திருக்கிறது ஏனென்றால் அவர்கள் கையில் வாக்காளர் பட்டியலும், கேபிள் டி. வி வாடிக்கையாளர் பட்டியலும் இருந்த‌தாம். அரசியல், பணம், பாலினம், வ‌யது என எந்தவிதப் பாகுபடுமின்றி வன்முறைகள் நடந்திருக்கின்றன.
இந்தக் கலவரத்தில் வன்முறையாளர்களின் தீவிரங்களை அறிவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அரசின் மெத்தனம். விசாரிப்பின்போது அவர்கள் சொல்லும் காரணம், போதுமான போலிஸ் இல்லை, அதிகாரம் இன்னும் கிடைக்கவில்லை போன்றவை. அகமதாபாத் குல்பர்க் சொசைட்டி, பெஸ்ட் பேக்கரி, காந்தி நகர் என வெவ்வேறு இடங்களில் நடந்த கலவரங்கள். உமர்ஜி ஹீசைன், மூத்த காங்கிரஸ் தலைவர் இஷான் ஜாஃபிரி போன்ற தலைவர்களின் நிலையே கேள்விகுறியானது. உதவிய சில நல்லுள்ளங்கள், கலவரத்தில் பெண்களின் ஈடுபாடு என இந்தப் புத்தகம் நகர்கிறது, வேறு சில முக்கியமான செய்திகளும் பகிரப்படுகிறது அதிலொன்று, கலவரத்தின்போது சமையல் எரிவாயு ஆயுதமாக‌ப் பயன்படுத்தப்பட்டது இங்குதானாம்.
சில பத்திரிக்கைகளின் மூலம் கலவரங்கள் தூண்டப்பட்டிருக்கிறது. ஆனால் வேறு சில பத்திரிகைகளின் மூலம்தான் இந்தக் கலவரத்தின் உண்மையான விவரம் வெளியுலகத்திற்கே வந்திருக்கிறது. தருண் தேஜ்பாலின் பத்திரிகை நடத்திய ரகசியப்  புலனாய்வு “The Truth : Gujarat 2002″ வெளியானது. இதுபோன்ற வேறு சில குழுக்கள் செய்த விசாரனை பற்றியும், அவர்களை மீட்க போராடியவர்கள் பற்றியும் இந்தப் புத்தகம் பேசுகிறது. கலவரத்தைப் பற்றி விசாரனை செய்த நானாவதி கமிஷன் சொல்வதென்ன. பதியப்பட்ட வழக்குகள், வழங்கப்பட்ட தீர்ப்புகள், அதன் விபரங்கள், மாறும் சாட்சியங்கள் என அனைத்தையும் பற்றி இந்தப் புத்தகம் பேசுகிறது. சம்பவம் சார்ந்த சில ஆவணங்களும், தகவல்கள் திரட்ட உதவிய இணையத்தளங்கள், புத்தகங்கள், திரைப்படங்கள் என இறுதியில் இணைக்கப்பட்டப் பட்டியல் வாசகரின் தேடலுக்கு உதவியாக இருக்கும்.
இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது மதம் பிடித்த யானையின் பிடியில் சிக்கி மாண்டு போகும் பாகனின் உருவம் நினைவிற்கு வருகிறது. ஏனென்று தெரியவில்லை.
குறிப்பு ; சில இடங்களில் 2012 என அச்சிடப்பட்டிருக்கிறது.

Thursday, January 1, 2015

வாசிப்பு 2014 - ஆளுமைகள்



பதிவுகளைத் தொடர்ந்து 2014ல் நான் வாசித்த சில ஆளுமைகள் பற்றின புத்தகங்களைப் பற்றி இதோ..


10.என் கதை - நாமக்கல் கவிஞர்


நாமக்கல் கவிஞரின் "என் கதை" ஓரு சுயசரிதை புத்தகம் தான்.சுயசரிதை புத்தகம் என்றதும் மொக்கையாக இருக்கும் என்ற எண்ணத்தை மாற்றிய புத்தகம் .ஒரு சில பக்கங்களைத் தவிர சுவாரஸ்யங்கள் நிறைந்த புத்தகம்  நாவலை படிக்கும் மனநிலை தான் இருந்தது.அவரது சிறு வயது முதல் தொடங்கி , நண்பர்கள், அவரது வேலைத் தேடும் படலம் , அரசியல் ஈடுபாடு,அதன் தொடர்பான‌ பயணம் என்று நகர்கிறது . எனக்கு அதில் மிகவும் பிடித்தது அவர் திருக்குறளுக்கு உரை எழுதும் தருணம் . ஏற்கனவே இருக்கும் உரை சாதாரண மக்களை சேருவதில் மிகுந்த சிரமமாக இருக்கும் நிலையில் தானே எழுத முன்வருகிறார்.அதைப் பற்றின எனது பதிவு இங்கே.



11.கணித மேதை இராமானுஜன் - ரகமி


பொதுவாக எண்கள் தான் ஒரு மனிதனனின் அடையாளமாக இருக்கும்.பள்ளி,கல்லூரியில் ஏன் அலுவலகத்தில் கூட எண்கள் தான் நமது அடையாளம்.ஆனால் 1729 என்ற எண்ணிற்கு ஒரு நபரின் பெயரை அடையாளமாகச் சூட்டியிருக்கிறார்கள்.ஆமாம் ,அந்த எண்ணின் பெயர் ”ராமானுஜன் எண்”. ராமானுஜன் பிறந்த நாளையொட்டி (டிசம்பர் 22) , இணையத்தில் சில பகிர்வுகள் வந்தது.அப்பொழுது உலாவியதில் கிடைத்த தகவல்தான் இது.இதைப் படித்ததலிரிந்து இராமானுஜன் பற்றி அறிந்துக் கொள்ள தேடிக்கொண்டிருந்தேன்.அப்பொழுது தான் இந்தப் புத்தகத்தின் அறிமுகம் கிடைத்தது.இராமானுஜன் பற்றி முழுமையான தகவல்கள் இருந்தது.ஆசிரியர் மிகைப்படுத்தி சொன்ன தகவல்களை திருத்தியும் கொடுத்திருந்தார்கள்.இராமானுஜன் பற்றி தெரிந்துக்கொள்ளும் அதே நேரத்தில் அவரது மனைவி ஜானகி அம்மாள் பற்றின குறிப்புகள் மிகவும் முக்கியமானது .அவரது தனிமை , இராமானுஜத்தின் இறப்பிற்கு பின்பு அவரது போராட்டம் நிறைந்த வாழ்வினை வாசிக்கும் போது அவர் ந‌ம் மனதில் நாயகராக உருமாறுகிறார்.

இந்தப் புத்தகம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது , அதன் தொடர்பான எனது  பதிவுகள் :

1729
M.G.R பற்றி ஒரு துணுக்குச் செய்தி
Congruences


12.நாயகன் பெரியார் - அஜயன் பாலா


முத்துகுமாரின் பெரியார் புத்தகம் தான் முதலில் கிடைத்தது , அதில் பெரியார் பற்றின தகவல்கள் அப்பட்டமாக‌ இருந்ததாக ஒரு உணர்வு.இந்தப்புத்தகம் பெரியாரை நாயகராக மட்டும் சித்தரிக்கிறது .பெரியாரின் பிறப்பு , அவரது வளர்ப்பு தாய் , இளமையின் துள்ளல் , அப்பாவிடம் நடக்கும் சண்டை அதனால் ஏற்படும் அவமானம்,காசி பயணம் அங்கு ஏற்படும் கடவுள் வெறுப்புக்கான காரணங்கள் , அரசியல் அறிமுகம் , ராஜாஜியின் நட்பு , காங்கிரஸிலிருந்து விலகல் , வைக்கம் போராட்டம் , தி.க கட்சி,அண்ணா,வீரமணி , கலைஞர் போன்றோரின் தொடர்பு , தாடியின் ரகசியம்,அவரது இரண்டாவது திருமணம் என தகல்வகளை பகிர்கிறார் ஆசிரியர்.சுருக்கமாக பெரியாரை தெரிந்துக்கொள்ள உதவும் புத்தகம்.அழகான பெரியார் ஓவியங்களும் இதில் உள்ளது.சிறுவர்களுக்கு பெரியார் பற்றின தாககத்தை ஏற்படுத்த‌ இந்தப் புத்தகம் உதவும்.

13.பெரியார் தன் வரலாறு - பெரியார்

[இணையத்தில் கிடைத்தது]

பெரியாரே எழுதிய வரலாறு , முழுசாக இருக்கும் என்று ஆசைப்பட்டேன் . ஆனால் அவரது வாழ்வில் நடந்த இரண்டே சம்பவங்களைப் பற்றி தான் சொல்லியிருப்பார்.பெரியார் வாழ்வில் ஒரு மிக முக்கியமான திருப்புமுனை என்று சொன்னால் அது அவருக்கு ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய அவமானம் தான்.அவரது தந்தை பொது இடத்தில் பெரியார் மீது காரி உமிழ்ந்து , செருப்பாலும் அடித்திருப்பார்.அதற்கு அஜயன் பாலா புத்தகத்திலும் , முத்துகுமார் புத்தகத்திலும் சொல்லும் காரணங்கள் சரியாக சொல்லவில்லை எனத் தோன்றும்.முத்துகுமார் புத்தகத்தில் ,பெரியாரின் முதல் குழந்தை பிறந்து 6 மாதத்தில் இறந்து விடுகிறது , சோகத்தில் அவர் குடிக்கிறார், வேசி வீட்டிற்கும் செல்கிறார் அதனால் ஆத்திரம் அடைந்து அவர் தந்தை அடித்ததாக வரும். பெரியாரை சமாதணம் செய்யாமல் ஏன் அவரது தந்டை அப்படிச் செய்தார் எனத் தோன்றும்.ஆனால் பெரியாரே சொல்லும் போது அதன் உண்மை நிலை உணர முடிகிறது.பிராமிணர்கள் 200 பெருக்கு விருந்து நடந்துக் கொண்டிருக்கிறது , அப்பொழுது போலிஸ் தேடும் ஒருவனை பெரியார் துரத்திப் பிடிக்கிறார்.அவன் அந்த விருந்து நடக்கும் இடத்தில் ஓடி ஒளிகிறான்.அவர் அங்குச் சென்று அவனை பிடித்து விடுகிறார்.அந்த விருந்தை யாரும் பார்க்க கூடதாம் , இவர் அங்குச் சென்று ஓடி அவனைப் பிடித்ததில் விருந்து முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டது.அதனால் அவரது தந்தைக்கு மிகவும் கோபம் , சரமாரியாக அடித்துவிடுகிறார்.

இந்தப் புத்தகத்தில் இரண்டாவதாக அவர் பேசுவது , ராஜாஜியின் நட்புடன் காங்கிரஸில் அவரது செய்ல்பாடுகளைப் பற்றி.அந்தக்கால அரசியல் நிலைப்பாடுகள் என்பதால் நிறைய விஷயங்கள் எனக்குப் புரியவில்லை.


14.வ‌ன வாசம் - கண்ணதாசன்


இது ஒரு முக்கியமான புத்தகம் , கண்ணதாசனின் சுய சரிதாம் தான் இது . கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.படிக்கும் போது கண்ணதாசன் வாழ்வை தெரிந்துக் கொள்வதை விட தி.க வின் பிளவைப் பற்றி அறிந்துக்கொள்ள மிகவும் உதவும் புத்தகம்.அவர் சொல்லும் வார்த்தைகளை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் வாசிப்பது அவசிய‌ம்.ஏனென்றால் அவரது தோல்வியைப் பற்றி மட்டும் பேசுகிறார்.டால்மியாபுரம் போராட்டம் கலைஞர் வாழ்வின் ஒரு முக்கியமானது அதைப் பற்றின தகவல்கள்,சம்பத் அவர்களைப் பற்றி,பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் அண்ணாவின் நிலைப்பாடு என பல அரசியல் தலைவர்கள் பற்றின ஒரு விமர்சணமாக இந்தப் புத்தகம் இருக்கிறது. வேகமாக படித்துவிடலாம் , அப்படியொரு எழுத்து நடை.அவரது அந்தரங்கத்தை வெளிப்படையாக சொல்வது வாசகனை தொடர்ந்து வாசிக்கச் செய்கிறது.அதைத்தவிர அதிகம் அவர் கலைஞரை சாடியிருக்கிறார்.ஒரு பக்கம் அவர் கலைஞர் மீது சொல்லும் குற்றச்சாட்டெல்லாம் இவர் தோல்விகளை கண்டதால் மட்டுமே சொல்கிறார் என தோன்றுகிறது.படித்து முடித்துவுடன் கலைஞர்,அண்ணா பற்றிய நமது மேலோட்டமான எண்ணங்கள் மாறும்.

15.மன வாசம் - கண்ணதாசன்


திமுகவில் தான் இருந்ததை வன வாசமாக சொன்ன கண்ணதாசன் காங்கிரஸில் தனது நிலையை மன வாசமாக சொல்கிறார்.ஆனால் எனக்கு அவர் இதில் அதிகம் பொலம்பியதாக தோன்றியது.அவர் யாரையும் விட்டுவைக்காமல் விமர்சித்துக் கொண்டேயிருந்தார்.காமாராசரையும் விட்டு வைக்கவில்லை.காமராசர் தன்னை விட யாரும் மேலும் வளராமல் பார்த்துக்கொள்வார் என விமர்சிக்கிறார்.இது எந்த அளவிற்கு உண்மையென தெரியவில்லை.ஆனால் அடி மனதில் இந்த வார்த்தை பதிந்து விட்டது.வன வாசத்தை விட சிறிய புத்தகம் தான் ஆனால் கடைசி சிலப் பக்கங்கள் நம்மை சலிப்படையச் செய்கிறது.அவரது வெளிநாட்டுப் பயணம் , கலைஞர்களோடு சில விழாக்களுக்கு செல்வது , அது இதுவென செல்கிறது.படிக்க முடியாமல் வைத்துவிட்டேன்


16.பகத் சிங் துப்பாக்கி விடு தூது - முத்துராகவன்


ஆதவன் தீட்சண்யாவின் சிறுகதை ஒன்று படித்தேன்.சிறையில் பகத் சிங் எழுதிய 4 புத்தகங்கள் நமக்கு கிடைக்காமல் போன தகவல்களை வைத்து எழுதிய கதை.பகத் சிங் வாழ்வை படிக்க வைத்த கதை.பகத் சிங்கின் பிறப்பு , அவரது விடுதலை உணர்வு.அவரது நண்பர்கள்.முக்கியமாக ராஜ குரு என நண்பர்.அவருக்கு பகத் சிங் மீது இருந்த சிறு பொறாமை என நுட்பமான தகவல்களை இந்தப் புத்தகம் தருகிறது.லாலா லஜுபது ராயின் மரணம் தான் பகத் சிங் வாழ்வின் ஒரு திருப்புமுனை என சொல்வேன்.அதற்கு பழிவாங்கும் நடவடிக்கைகள் தான் அவரை முழு போராளியாக மாற்றியது.சுக்தேவ் , சந்திரசேகர்,Ashfaqulla Khan  என அவரது குழுவினரைப் பற்றியும் இந்தப் புத்தகம் பேசுகிறது.டெல்லியில் குண்டு வீசி தங்களது எதிர்ப்பை தெரிவிக்கிறார்.அதற்கு அவர் தயாராகும் நிலைப் பற்றியும் , அதன் பின் அவரது சிறை வாழ்வு அங்கு நடக்கும் உண்ணாவிரத போராட்டம் , அதில் இறக்கும் நண்பர்.அங்கு தொடரும் அவரது வாசிப்பும் எழுத்தையும் பற்றி பேசிவிட்டு தூக்கு மேடையுடன் முடிகிறது

அவரது இறப்பிலும் சில ரகசியங்கள் மறைந்திருப்பதாக தகவல்கள் இருக்கின்றன.அதைப் பற்றியும் இந்தப் புத்தகம் பேசுகிறது.காந்தியைப் பற்றி எவ்வளவு உயரிய எண்ணங்கள் மனதில் இருந்தாலும் , காந்தி நினைத்திருந்தால் பகத் சிங்கை காப்பாற்றி இருக்கலாம் என்ற வரி மட்டும் மனதில் அவரது பிம்பத்தை உடைத்துக் கொண்டேயிருக்கிறது.

பகத் சிங் பற்றித் தெரிந்துக்கொள்ள உதவும் நல்ல புத்தகம் இது.


மற்ற புத்தகங்களைப் பற்றின பதிவும் மேலும் தொடரும்.....