Monday, December 26, 2016

வாசிப்பு 2016 - சிறுவர் இலக்கியச் சிந்தனைகள்

சிறுவர்களுக்கான இலக்கியத்தை சிறுவர்களின் வயதிற்கேற்ப‌ இரண்டாக பிரித்தல் வேண்டும் என்று நண்பர் விழியன் அடிக்கடி சொல்வார். எட்டு வயது வரை உள்ள சிறுவர்களுக்கானது "குழந்தை இலக்கியம்" என்றும் , 8 முதல் 14 வரையில் உள்ளவர்களுக்கானது  "சிறுவர் இலக்கியம்" என்றும் பிரித்திடல் வேண்டும். அதே போன்று "தமிழ் விமர்சன" இலக்கியத்தில் "சிறுவர் இலக்கிய விமர்சனம்" என்று தனிப் பிரிவையையும் உருவாக்கிடல் வேண்டும்.அந்த பிரிவில் சேர்க்கப்பட வேண்டியவை தான் கீழே உள்ள புத்தகங்கள். ஆசிரிய‌ர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் மற்றும் சிறுவர்கள் சார்ந்து இயங்கும் நண்பர்களுக்கும் இதனை பரிந்துரை செய்கிறேன். இந்தப் புத்தகங்கள் மூலமாக சிறுவர் இதழ்கள் பற்றின தரவுகள் நிறைய கிடைத்தன‌. அதில் முக்கியமான ஒன்று 1950 களில்,மாதம் 50 தமிழ் சிறுவர் இதழ்கள் வெளியாகியுள்ளன‌ என்பது தான். இன்று எத்தனை இதழ்கள் வெளிவருகின்றது என்ற கேள்வி தான் பஞ்சுமிட்டாய் இதழாக உருமாறியது.

3. தமிழ்க் குழந்தை இலக்கியம் விவாதங்களும் விமர்சனங்களும் - சுகுமாரன் 

சென்னையில் எழுத்தாளர் விழியன் இல்லத்தில் சிறுவர் இலக்கியம் சார்ந்து ஒரு நாள் பட்டறை நடந்தது , அப்பொழுது அறிமுகமான புத்தகம் தான் இது . சுகுமாரன் அவர்களும் அங்கு வந்திருந்தார். செம ரகளையான புத்தகம். தமிழ் சிறுவர் இலக்கியத்தின்வளர்ச்சி,அதன் போக்கு,தற்பொழுதைய நிலை,சிறுவர் இலக்கியத்தின் பிரிவுகள்,இதழ்கள் என அனைத்து அம்சங்கள் பற்றியும் விரிவாக பேசுகிறார் சுகுமாரன். ஒரு நல்ல அரசு,சிறுவர்களுக்கான உலகத்தினை கட்டமைப்பதில் என்னென்ன‌ செய்திடல் வேண்டும் என்ற கேள்விக்கு நல்ல நூலகங்கள்,ஒவ்வொரு நூலகங்களிலும் சிறுவர்களுக்கான பிரிவு,சிறுவர்களுக்கான நிகழ்வுகள்,சிறுவர்களுக்கான  திரையரங்குகள் என்று நீண்ட பட்டியலை தருகிறார். இவை அனைத்தும் தமிழகத்தில் இருக்கிறதா,ஏன் அதற்கான எந்தவித முயற்சிகளும் எடுக்கப்படவில்லை என்பதைப் பற்றியும் பேசுகிறார்.

தற்பொழுது யார் யார் சிறுவர் இலக்கியத்தில் இயங்குகின்றனர்,சிறுவர் இலக்கியத்தில் பள்ளி ஆசிரியர்களின் பங்கு எத்தகையது,உண்மையில் சிறுவர்களுக்கான படைப்புக‌ள் தான் வருகிறதா என்று பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. காலம் மாறுகிறது சிறுவர்களின் ரசனையும் உலகமும் ஏகப்பட்ட மாற்றங்களை சந்தித்துவிட்டன‌ ஆனால் சிறுவர் இலக்கியம் மட்டும் மாறாமல் வள்ளியப்பா ஏற்படுத்திய பாணியிலே பயணிப்பதை சுட்டிக் காட்டுகிறார்.

"குழந்தை இலக்கியத்தில் குழந்தையின் உணர்வுகளும் எண்ணங்களும் செயல்களுமே வெளிப்பட வேண்டும். ஆனால் வெளிப்பட்டதெல்லாம் குழந்தை எழுத்தாளரின் எண்ணங்களும் உணர்வுகளுமே !"

என்று சிறுவர் இலக்கியம் சிறுவர்களிடமிருந்து அன்னியப்படிருப்பதையும் சாடுகிறார்.

4.சிறுவர் இலக்கியச் சிந்தனைகள் - பூவண்ணன்

சிறுவர் இலக்கியம் சார்ந்து வெவ்வேறு காலக்கட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்த புத்தகம். தமிழ் சிறுவர் இலக்கியம் எப்பொழுது தோன்றியது, அதன் ஆளுமைகள் யார்,அதன் வளர்ச்சி எத்தகையது, முதல் சிறுவர் இதழ் எது , இதுபோன்ற எண்ணற்ற‌ கேள்விகளுக்கு விடையாக அமையும். பாடல்கள்,கதைகள்,கதைப் பாடல்கள்,விடுகதைகள்,நாடகங்கள்,திரைப்படங்கள் என சிறுவர்கள் இலக்கியத்தின் பிரிவுகளில் தமிழில் வந்த படைப்புகளைப் பற்றின ஒரு விரிவான பார்வை இதில் உள்ளது.
அவ்வையின் ஆத்திச்சூடி உண்மையிலே சிறுவர் இலக்கியமா  அதைச் சார்ந்து நடந்த விவாதகங்கள்,சிறுவர் இலக்கிய எழுத்தாளர் சங்கத்தின் தோற்றம்,அதன் செயல்பாடு,வள்ளியப்பா எனும் ஆளுமையின் பங்கு என தமிழ் சிறுவர் இலக்கியத்தின் வரலாற்றை அழகாக சொல்கிறது. வெவ்வேறு காலக்கட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் என்பதால் , சில கருத்துக்கள் மீண்டும் மீண்டும் வருவது சலிப்பை தருகிற‌து.மற்றபடி சிறுவர் இலக்கியம் பற்றிய‌ புரிதலை தேடுவோருக்கு இது ஒரு சிறந்த புத்தகம்.

5.அழ.வள்ளியப்பா - பூவண்ணன்

அழ.வள்ளியப்பா...சென்ற தலைமுறை தமிழ் பெற்றோர்களுக்கு நன்கு பரிச்சயமான பெயர். சிறுவர் பாடல்கள் பற்றின‌ பேச்சுக்கள் எழும் போதெல்லாம் வள்ளியப்பாவின் பாடல்களை
நினைவுகொள்கின்றனர். இந்தத் தலைமுறை பெற்றோர் பல‌ருக்கும் அழ.வள்ளியப்பா யார் என்பதே தெரியவில்லை. 90களில் டிவியின் தாக்கம் அதிகமானது இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு  சினிமா அல்லாத சிறுவர்களுக்கான‌ தமிழ் பாடல்கள் என்றதும் முதலில் நினைவிற்கு வருவது வள்ளியப்பாவின் பாடல்கள் தான்.  "அணிலே அணிலே ஓடி வா"  , "தோ தோ நாய் குட்டி" , " மாம்பழமாம் மாம்பழம் " போன்ற பாடல்கள் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

வள்ளியப்பா புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் , ஆனால் சென்னையில் வங்கி பணியிலிருந்தார். சென்னையில் இருந்துக்கொண்டே புதுக்கோட்டையில் சிறுவர் இதழை கொண்டுவந்திருக்கிறார். அச்சு மட்டும் தான் புதுக்கோட்டையில் நடந்திருக்கிறது. அதற்கு முந்தைய வேலைகள் அனைத்தையும் சென்னையிலே செய்திருக்கிறார். மிகவும் மலைப்பாக இருக்கிறது. மாதம் 10 இதழ்கள் வெளிவர உறுதுனையாக இருந்திருக்கிறார். சிறுவர்களுக்கான படைப்புகளை மட்டுமல்ல , பல படைப்பாளிகளையும் உருவாக்கியுள்ளார். இந்த வேகத்திலும் , படைப்புகளில் சிறுவர்களை திசை திருப்பும் எண்ணங்கள் எதுவும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்.ஒரு முறை தமிழ் சிறுவர் இலக்கியத்தில் துப்பாக்கி கலாச்சாரம் தலை தூக்கியிருக்கிறது, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். (அதன் எதிர்ப்பு எப்படி முடிவுற்றது என்பதை தேடிட வேண்டும்.)

இந்தப் புத்தகத்தை வாசித்தப் பொழுது மனதில் ஓடிய எண்ணம் இது தான், "தனி மனிதராய் மனுஷன் எப்படியெல்லாம் இயங்கியிருக்கிறார்!" என்று. நல்ல நண்பர்கள் மட்டும் இருந்தால் போதும் நமது விருப்பங்களை கண்டிப்பாக உருமாற்றிக் கொள்ள முடியும் என்பது தான் வள்ளியப்பாவின் வாழ்வு எனக்கு சொல்வதாக தோன்றுகிறது.

Monday, December 12, 2016

வாசிப்பு 2016 - நீர் அரசியல்

இந்த (2016 ) வருடத்தில் எனது வாசிப்பு சிறுவர் இலக்கியம் சார்ந்தே அதிகமாக இருந்திருக்கிறது. கதை சொல்லல் நிகழ்விற்காக வாசிக்க ஆரம்பித்தது. பின்னர் அதுவே தேடலானது. தமிழ் சிறுவர் இலக்கிய போக்கு,அதன் விமர்சனங்கள்  என புத்தகப் பரிந்துரைகள் கிடைத்துக் கொண்டேயிருந்தன‌. சிறுவர் இலக்கியம் அல்லாது சிலவற்றையும் வாசித்தேன்,அப்படி இப்படியென இந்த வருடம் 40 புத்தகங்கள் வாசித்திருக்கிறேன். எனது புத்தகத் தேர்வுகளில் 50 சதவிதம் நண்பர்களின் பரிந்துரைகள் தான். ஆகையால் நானும் வாசித்த புத்தகங்களைப் பற்றிய‌ அறிமுகங்களை இங்கு பதிவு செய்கிறேன். என்னைத் தேடிவந்த புத்தகங்கள் உங்கள் இல்லக் கதவுகளையும் தட்டட்டும்.

முதல் பதிவாக , சமகால நீர் நிலையங்கள் சார்ந்து கடந்த வருடம் வெளியான‌ இரண்டு நாவல்களைப் பற்றி பகிர்கிறேன்.

1.மூன்றாம் நதி - வா.மணிகண்டன்

வா.மணிகண்டன் , பெங்களூரூவாசி . அவரது ப்ளாக் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். 2016ல் அவரது "மூன்றாம் நதி" நாவல் வெளியானது.இது பெங்களூரின் கடந்த 40 ஆண்டுகளின் கதை. நீர் மிகப்பெரிய‌ வியாபாரப் பொருள் இங்கே. அந்த வியாபாரத்தின் அரசியலை ஒரு பெண்ணின் கதை மூலம்

பேசுகிறது இந்த நாவல். நாவலை இரு வேறு பகுதியாக நான் பார்க்கிறேன். முதல் பகுதி IT  நிறுவனங்களின் வரவுக்கு முன்பிலிருந்து துவங்குகிறது.இந்தப் பகுதியில் கதையின் காலம் வேகமாக செல்கிறது. பெங்களூரின் மாற்றத்தை நாயகியின் வளர்ச்சியோடு சொல்கிறது.இரண்டாம் பகுதி மிகவும் நிதானமாக கதையின் மையத்தில் நம்மை உலாவ செய்கிறது.சாலையில் நீரை சிந்திக்கொண்டே செல்லும் தண்ணி லாரியின் காட்சியை கண்டிப்பாக இந்த நாவல் நமக்குக் கொண்டு வரும்.

நான் கல்லூரி முடித்து , சென்னைக்கு முதல் முதலாக வந்தப்பொழுது தண்ணீர் பாக்கெட் வாங்கவே சங்கடமாக இருக்கும்.மனம் வரவே வராது.இன்று அப்பார்ட்மெண்ட் மாத செலவு கணக்கை பார்த்தால் 60% தண்ணீருக்காக இருக்கிறது. போர் போட வசதியும் தொழிநுட்பமும் இருக்கிறது என்பதற்காக நகரத்து மக்களாகிய நாம்  கிடைத்த இடத்தில் எல்லாம் போர் போட்டோம் , ஆனால் சிறிது காலத்திலேயே தண்ணிர் வற்றியது . தண்ணீரை வெளியில் தான் பெரும்பாலான அப்பார்ட்மெண்டுகள் வாங்குகின்றன. அப்படி வாங்கப்படும் தண்ணீர் பற்றின கதையை வாசிக்கும் போது மனதினுள் குற்ற உணர்வு எழாமல் இல்லை.

2.முகிலினி - இரா.முருகவேள்

எனது அப்பார்மெண்டில், வாசிப்பு பழக்கமுள்ள நண்பர்களுடன் மாதம் ஒரு முறை கூடி புத்தகம் பற்றி பேசுவது வழக்கம். அப்படி ஒரு முறை சந்திக்கும் பொழுது எழுத்தாளர் முருகவேள் அவர்களை SKYPE மூலம் இணைத்தோம்.அற்புதமான சந்திப்பு அது.கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக எங்களது உரையாடல் சென்றது.முகிலினி நாவலுக்காக அவர் சந்தித்த சில விஷயங்களை எங்களுடன் பகிர்ந்தார். அவருடனான உரையாடல் முகிலினியை பற்றின ஆர்வத்தை அதிகப்படுத்தியது.500 பக்க நாவல் என்பதால் நல்ல நேரத்திற்காக காத்திருந்தேன். 5 நாட்கள் தொடர் விடுமுறை வந்தது.முகிலினியுடன் கைகோர்த்தேன்.

ஆறு , ஏரி என்றதும் இன்றைய நகரத்து சிறுவர்களுக்கு மனதில் வரும் காட்சி எதுவாக இருக்கும் ? கருப்பு நிற சாக்கைடையாகத்தான் கண்டிப்பாக இருக்கும்.பெங்களூர் ஏரிகளின் நகரம் , ஆனால் இன்றோ தினம் தினம் ஏரிகளைக் கடக்கும் போது மூக்கை மூடிக் கொள்கிறோம். பெங்களூர் ஏரிகள் போன்று தான் மோசமான நிலையில் இருக்கிறது பவானி நதியும் .  அதுவும் கண் முன்னே ஒரு நதி பயனற்றதாய் மாறுவதை பார்ப்பது என்பது கொடுமையானது. அப்படி நமது தலைமுறையில் பவானி கரு நிற தார் போன்று மாறி ஓடுயிருக்கிறது. அதற்கு காரணமாயிருந்த டெக்கான் ரேயான் (விஸ்கோஸ்) ஆலையின் தோற்றம் , வளர்ச்சி , மறைவு என ஒரு நூற்றாண்டின் வரலாற்றை பல்வேறு கோணத்தில் சொல்கிறது முகிலினி. இந்த ஆலையத்தை மக்களின் போராட்டங்களை கொண்டே மூடியிருக்கின்றனர்.10 ஆண்டுகளுக்கு முன்னர் தான் நடந்திருக்கிறது. ஆனால் இதைப் பற்றின எந்தவிதத் தகவலும் அறியாமலேயே தமிழனாய் இருந்திருக்கிறேன்.ஊடகங்களின் மூலம் சினிமாவும் க்ரிக்கெட்டும் என்னை வந்து சேர்ந்திருக்கிறது ஆனால் தண்ணீருக்கான மக்களின் இந்த மாபெரும் போராட்டம் என்னை வந்து சேரவில்லை.

சமகால வரலாற்றை வாசித்தது தனி அனுபவமாய் இருந்தது. காமராசர் , நம்மாழ்வார் என நான் அறிந்த நபர்களையும் , இந்தி எதிர்ப்புப் போராட்டம் , இயற்கை உணவின் சந்தையைப் பற்றியும் நாவலில் கடக்கும் பொழுது மனதின் சிந்தனை ஓட்டம் தனி சக்தி பெறுகிறது. ஒரு பெறும் நிறுவனம் மக்களை கையாளும் முறை , நிறுவனத்தை மக்கள் எதிர்க்கும் மனநிலைக்கு மாறிய பின்னனி ,   அதே நிறுவனம் மூடப்படும் போது மக்களின் மனநிலை , ORGANIC என்று மக்களின் பார்வை சற்றே திரும்பியதும் வியாபார அரசியல் எப்படி சிந்திக்கிறது என பல்வேறு தளங்களில் நாவல் செல்கிறது.

முகிலினியை பற்றி தனியாக பதிவு எழுதிட வேண்டும் , இங்கு இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.நண்பர்கள் யாராவது பரிந்துரைகள் கேட்டால் தற்பொழுது நான் முதலில் சொல்வது முகிலினையைத் தான்.இந்த வருடம் நான் வாசித்த சிறந்த புத்தகம் இது.

Saturday, December 3, 2016

சிகாகோவில் ஆடிப்பெருக்கு…

மலைகள் இதழில் வெளியான எனது கட்டுரை - http://malaigal.com/?p=7406
வழக்கமான காலை தான்,தங்கும் இடத்திலிருந்து அலுவலகம் நடக்கும் தூரம் என்றாலும் அந்தக் குளிர் 4 அடிகள் எடுத்து வைப்பதற்குள் எனது எழும்புகளையும் காது மடல்களையும் தொட்டு இம்சை செய்துக் கொண்டிருந்தது.டிசம்பர் மாத குளிருக்கு இந்த மார்ச் மாதம் பரவாயில்லை.சிகாகோ நதி உரையாமல் அன்ன நடை போட துவங்கியிருந்தது.அன்றைய தினம் அலுவலகம் செல்லும் வழியில் இரண்டு மூன்று இடங்களில் செயற்கை நீருற்று புதிதாக முளைத்திருந்தது.அதுவும் பச்சை வண்ண நீருற்று.
“இப்போ தான் குளிரு லேசா குறைஞ்சிருக்கு,அதுக்குள்ள இவனுங்க அட்டகாசம் தாங்கல” என்ற மனதில் சிகாகோ வாசிகளை கடிந்துக் கொண்டே கடந்துச் சென்றேன்.மறுநாள் தான் உண்மை விளங்கியது.தனிமை ஒரு வரம் என்று சொல்ல நான் படைப்பாளி அல்ல.அது எனக்கு சாபமே.இருந்தும் புத்தகம்,திரைப்படம் ,அவ்வப்பொழுது நண்பர்கள் வீட்டில் விருந்து,ஒன்றாக வெளியே செல்வது என சமாளித்துக் கொண்டிருந்தேன்.அந்த மாதிரி தான் மறுநாள் காலை நண்பர் ஒருவர் 
“பாஸ்..காலையில் 9.30 மணிக்கு சிகாகோவுல ST. PATRICK’S DAY EVENT.வாங்க போகலாம் ” என்று அழைத்தார்.என்ன ஏதுவென புரியாமல் நானும் வரேன் என்று சொல்லிவிட்டேன். 
சரியாக 10 மணிக்கு கிளம்பினோம்,வீட்டிலிருந்து எட்டிப் பார்க்கும் தூரத்தில் சிகாகோ நதி.அங்கு தான் ஏதோ விசேசம் என்பதை தெருவிற்கு வந்ததும் புரிந்தது.அங்கும் இங்குமாக மக்கள் கூட்டம் அதுவும் பச்சை நிற அரை குறைஆடையில்.கூட்ட நெரிசலில் நுழைந்து நதியை நன்றாக பார்வையிடும் இடத்தில் நின்றுக் கொண்டோம்.அப்பொழுது தான் நண்பர் விளக்கம் சொன்னார்.“வருடத்திற்கு ஒரு முறை சிகாகோ நதியில் பச்சை வண்ண நிறத்தை கலக்குவார்கள்.நகரத்தின் எல்லைக்குள் உள்ள ஆற்றின் பகுதி முழுதும் பார்க்க பச்சை வண்ணமாக மாறிவிடும்.பார்க்க அழகாக இருக்கும்” என்றார்.அவர் சொன்னது போல் அந்த நிகழ்வு பார்க்க அழகாக இருந்தது.ஆற்று பாலத்திலும்,கரை ஒரங்களிலும் மக்கள் நிற்க , படகில் வந்த அந்தக் குழு 5 நிமிடத்தில் பச்சை வண்ண சாயத்தை ஆற்றில் முழுவதுமாக‌ கலந்துவிட்டார்கள்.இந்த தினத்தை RIVER DYEING DAY என்றும் கூறுகிறார்கள். 
10-15 நிமிடம் வேடிக்கை பார்த்துவிட்டு , அப்படியே வரலாற்று சான்றுகளுக்காக புகைப்படங்களை இப்படி அப்படியென எடுத்துக் கொண்டோம்.கூட்டத்தில் ஆங்காங்கே சில நிறுவனங்கள் இலவசமாக yogrut , salad களை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.”சரி காலை சிற்றுண்டிக்கு ஆச்சு” என வாங்கிக் கொண்டு நகர்ந்தோம்.ஒருவர் ஏதோ மாத்திரைகளை கொடுத்துக் கொண்டிருந்தார்,என்னவென்று விசாரித்தால் மது அருந்தி தலை சுற்றினால் அதற்காக hangover மாத்திரையை இலவசமாக கொடுத்துக் கொண்டிருந்தார்கள். 
“அடப் பாவி மக்கா..” என்று நினைத்துக் கொண்டோம்.வழி நெடுக்க நிறைய இளைஞர்கள் கூட்டம்.30 சதவிதம் நன்றாக குடித்திருந்தார்கள்.ஆனால் யாரையும் தொந்தரவு செய்யவில்லை.நாங்கள் அப்படியே பொடி நடையாக  ST. PATRICK’S DAY PARADE பார்க்க சென்றோம்.PARADE  ஒன்றும் பெரிதாக மனதை ஈர்க்கவில்லை.ஆனால் அங்குள்ள மக்கள் அதனை குதூகலமாக கொண்டாடினர்.அதையும் முடித்துவிட்டு வீடு திரும்பினோம்.வந்ததும் கூகுள் ஆண்டவரிடம் இதைப் பற்றி கேட்டேன்.அவர் சொன்ன கதையை அப்படியே உங்களுக்கு சொல்லுகிறேன் கேளுங்கள். 
1960 வாக்கில் சிகாகோ ஆற்றங்கரையிலுள்ள சில கட்டிடங்களிலிருந்து கழிவுகள் ஆற்றில் கலந்திருக்கிறது.அதனை  fluorescent  திரவத்தின் உதவியோடு plumber கள் குழு கண்டுப்பிடித்திருக்கின்றனர்.அதன் பக்க விளைவாக ஆறு முழுதும் பச்சை வண்ணமாக மாறியதை கண்டதும் அதனையே ஒரு நிகழ்வாக மாற்றலாம் என யோசித்தனர்.பச்சை வண்ணத்தின் ஒரு ரகம் Shamrock green (Irish green). Shamrock  என்பது ஒரு செடி வகை , அதன் இலை அயர்லாந்தின் சின்னமாக கருதப்படுகிறது அதனை புனிதமாகவும் கருந்துகின்றனர். அயர்லாந்தின் பாதுகாவலரான புனித பேட்ரிக்கின் நினைவு நாளை கத்தோலிக்க சமயத்தினர் ஆண்டுதோறும் மார்ச் 17 அன்று  புனித பேட்ரிக்கின் நாள் என கொண்டாடுகின்றனர்.ஆகையால் பச்சை வண்ணத்தையும் , புனித பேட்ரிக்கின் நாளையும் தொடர்பு செய்து சிகாகோவில் மார்ச் 17 ஐ தொடர்ந்து வரும் சனிக்கிழமையில் Saint Patrick’s Day\River dyeing day யாக கொண்டாடுகிறார்கள். 
“இப்படி சாயத்தை கலப்பது நல்லதா?” என்று நான் கேட்கும் முன்பே. 
“Fluorescent ஆற்றில் கலப்பது நீரில் வாழும் உயிர்களுக்கு ஆபத்தானவை,ஆகையால் அரசாங்கம் இயற்கையான முறையில் சாயத்தை தயார் செய்தது.அதன் சூத்திரம் இன்று வரை ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது.பல் வேறு நாடுகளில் முயற்சிகளை மேற்கொண்டும் இவர்களின் அந்த பச்சை வண்ண ரகத்தை யாராலும் செய்ய முடியவில்லை” என்றார் கூகுளாண்டவர். 
தஞ்சையில் சிறு வயதில் ஆடிப்பெருக்கிற்கு உற்றாருடன் ஆத்தங்கரைக்கு செல்வோம்,காலத்தின் மாற்றம் பின்பு கிணத்தடியில் கொண்டாடினோம்,பின்பு அதுவும் முடிந்தது வீட்டுக்குள்ளேயே ஆடிப்பெருக்கு சுருங்கியது.வேலைத் தேடி நகரம் நோக்கி நகர்ந்ததும் ஆடிப்பெருக்கே மறந்திருந்தது.அப்பொழுது தான் பொன்னியின் செல்வன் வாசிக்க சந்தர்ப்பம் கிட்டியது.முதல் அத்தியாயமே ஆடிப்பெருக்கு நிகழ்வு தான்.எனது சிறுவயது ஆற்றங்கரை ஆடிப்பெருக்கு காட்சி மனதில் ஓடியது.கையில் மஞ்சள் கயிறு,ஊதுபத்தியில் செய்த அந்த வளையம்,மஞ்சள் கலந்த அரிசி,பேரிக்காய் என‌ ஆற்றில் விட்ட அந்தக் காட்சி ஓடியது.பொன்னியின் செல்வன் வாசித்தப் பொழுது ஏற்பட்ட அதே உணர்வு சிகாகாவில் மீண்டும் கிடைத்தது என்று சொன்னால் அது மிகை ஆகாது.

ஆங்கில வழிக் குழந்தை வளர்ப்பு

மலைகள் இதழில் வெளியான எனது கட்டுரை - http://malaigal.com/?p=8130

“1813-ன் கல்வி சாசனம் தனது நான்காவது ஷரத்தாக ஒரு முக்கிய அறிவிப்பைக் கொண்டிருந்தது.இன்றைய நமது வகுப்பறைகளின் உயிர்நாடி அதுதான்:

‘இந்திய மக்களுக்குக் கிழக்கிந்தியக் கம்பெனியின் பல்வேறு துறைகளில் வேலை பார்க்க சாதி மத அந்தஸ்து எதுவும் தேவையில்லை.கல்வித் தகுதி அடிப்படையில் மட்டுமே வேலை வழங்கப்படும்.’

இந்தக் கல்வித்தகுதி ஆங்கிலப் பள்ளி வழிக் கல்வி!”

‍ – இது யாருடைய வகுப்பறை – இரா.நடராசன்.

1813 ல் போடப்பட்ட விதை,இந்த 200 வருடங்களில் பெரும் மரமாய் நம்முன் நிற்கின்றது.சென்ற தலைமுறையில் எப்படி ஆங்கில வழிக்கல்வி அத்தியாவசிய‌மாய் நினைக்கப்பட்டதோ , இந்தத் தலைமுறை;ஆங்கில வழிக் குழந்தை வளர்ப்பை அத்தியாவசிய‌மாய் எண்ணத் துவங்கிருக்கிறது.முக்கியமாக பெரு நகரங்களில். ‘What do you want டா செல்லம்’ ‘Dont go there அம்மு’ போன்ற வசனங்களை மிக எளிதாகக் கேட்க முடிகிறது.அன்பையும்,பாசத்தையும் வெளிக்காட்ட மட்டும் தாய்மொழியை கொஞ்சம் ஊறுகாய் போலத் தொட்டுக்கொள்கின்றனர்.

இரண்டு ஆண்டிற்கு முன் நடந்த நிகழ்வு , எனது தோழி தனது இரண்டு மகன்களுடன்(சிறுவர்கள்) தனியே அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்தார்.அவரது இரண்டாவது மகனிற்கு 3 வயது இருக்கும்.அமெரிக்காவில் பிறந்தவன் அவன் , முதன்முதலாக இந்தியாவிற்கு வருகின்றான்.அவனைக் காண பெரும் ஆர்வத்துடன் தாய் வழி மற்றும் தந்தை வழி தாத்தா இருவரும் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.இரவெல்லாம் உறங்காமல் பிஞ்சுகளுடன் கொஞ்சிப் பேசக் காத்திருந்தனர்.சிறுவர்களைப் பார்தததும் கட்டி அணைத்து ஆராவாரத்துடன் பேசினால் , மொழி நடுவே பெரும் முட்டுக்கட்டையாக நிற்கின்றது.எதுவுமே பேச முடியாமல் தவித்த காட்சி இன்றும் எனது நினைவில் இருக்கிறது.

வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் நிலை இதுவென்றால், தமிழ்நாட்டை விட்டு வெளியே இருக்கும் நம்மவர்களின் நிலை வேறு மாதிரி இருக்கிறது.பெங்களூரில் வேலை பார்க்கும் பெரும்பாலோர் தங்களது குழந்தைகளிடம் ஆங்கிலமே பேசுகின்றனர்.பல்வேறு கலாச்சாரமும் , பல்வேறு மொழிபேசுவோரும் இங்குக் கலந்து இருப்பதால் ஆங்கிலத்தைத் தங்களது தாய்மொழியாய் மாற்றிக்கொள்ளவே ஆசைப்படுகின்றனர்.இந்த ஆசைக்கு
மேலும் நீர் ஊற்றி வளர்க்கும் வகையில் , 3 வயது சிறுவர்களுக்கே – “வீட்டில் ஆங்கிலத்தில் பேசுங்கள்” என்று பள்ளி நிர்வாகம் பரிந்துரைக்கிறது.குழந்தை வளர்ப்பில் ஆசிரியர்களை கடவுள் நிலையில் வைத்திருக்கும் நம்மவர்கள் , எதற்காக இப்படி பரிந்துரைக்கின்றனர் என்று சிறிதும் சிந்திக்காமல் இது போன்று சொன்னதும் வீட்டில் சூழலை தலைகீழாய் மாற்றிவிடுகின்றனர்.வீட்டிலுள்ள அனைவருமே ஆங்கிலத்தில் சிறுவர்களிடம் பேசுவது தான் நல்லது என்று நம்பத் துவங்கிவிடுகின்றனர்.”எஞ் சாமி..சாப்பிட்றா” என்று கொஞ்சிய தாய் இதற்கு இனையான வார்த்தகளை ஆங்கிலத்தில் தேடிவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

சென்னையில் வாழும் எழுத்தாளர் விழியன் தனது முகப்புத்தகத்தில் இப்படிப் பதிந்திருக்கிறார் ,
“அடுத்த தலைமுறையினருக்கு குறைந்தபட்சம் தமிழ் பேசவும் தமிழை வாசிக்கவுமாவது கற்றுத்தர வேண்டும். ஐந்தாம் வகுப்பில் தமிழ் மூன்றாம் பாடமாக வருகின்றது, வேற வழியே இல்லாமல் தமிழ் படிக்க வைக்க வேண்டும் என்ற சலிப்பு ஒரு புறம். என் பையனுக்கு ஏற்கனவே படிப்பு சுமை, இதில் தமிழை வேற திணிக்க வேண்டாம்னு நினைக்கிறேன்னு ஒரு சப்பைக் கட்டு. தன் தாய்மொழியை கற்க வைப்பது திணிப்பில் வருமா?
உங்கள் குழந்தைக்குத் தமிழ் தெரியாமல் போனால் அந்த சந்ததியே தமிழ் கற்காமல் போகும் வாய்ப்பு உள்ளதை நீங்கள் அறிவீர்கள் தானே?”

ஆக சென்னையிலும் நிலை இது தான்.அட்டவனை போட்டு சிறுவர்களின் உலகை சுருக்கிவிட்டு , தமிழ் என்றதும் சுமை , திணிப்பு என பாச மழை பொழியத் துவங்கிவிடுகின்றனர் இன்றைய பெற்றோர்கள்.நாட்டுப்பற்றை க்ரிக்கெட்டிலும் , மொழிப்பற்றை சினிமாவிலும் காட்டிக் காட்டி பழகிவிட்ட நமக்கு இவையெல்லாம் சுமையாகத் தான் தெரியும்.

சிறுவர்கள் என்றும் தாய்மொழியை சுமையாக நினைப்பதில்லை , எனது தெருவிலுள்ள சிறுவர்களிடமும் , கதை சொல்லும் நிகழ்விற்கு வரும் சிறுவர்களிடமும் நான் பேசிப்பழகும்பொழுது இதை நன்கு உணர முடிகின்றது.அவர்களுடன் தமிழில் பேசினால் அவர்களும் தமிழில் தான் பேசுகின்றனர்.நமது ஆங்கில அறிவை நிரூபிப்பதால் தான் அவர்கள் ஆங்கிலத்திற்கே மாறுகின்றனர்.அவர்களது சூழலில்; தமிழ் பேச்சு இயல்பாக இருந்தால் அவர்களும் தமிழில் தான் பேசுவார்கள்.அவர்களது சூழலில் ; தமிழ் வாசிக்கும் நபர்களைப் பார்க்கும்பொழுது அவர்களும் தமிழை வாசிக்க வேண்டும் என்று ஆசைபடுவார்கள்.

“தமிழ் பேசுனா புரிஞ்சிப்பாள்/ன் , ஆனா தமிழ்ல பேச வராது” ,”தமிழ் பேசத் தெரியும்,ஆனால் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது” என்ற வார்த்தைகளை ஒரு பக்கம் சொல்லிக்கொண்டு மறுபக்கம் தமிழர் என்று பெருமிதம் கொள்வதில் அர்த்தம் ஏதுமில்லை.முதலில் பிள்ளைத் தமிழின் சுவையை ருசிப்போம், பின்னர் தமிழன் என்றும் தமிழச்சி என்றும் மார்தட்டிக் கொள்வோம்.

Sunday, November 27, 2016

பஞ்சுமிட்டாய் ...

பெங்களூரில் அப்பார்ட்மெண்ட் சிறுவர்களுக்கு கதை சொல்ல ஆரம்பித்து இன்றோடு ஒரு வருடம் கடந்துவிட்டது. மகிழ்வைப் பகிர ஒரு பதிவு தேவைப்படுகிறது.

வாசிப்பு பழக்கம்  புதிய நண்பர்களை அறிமுகம் செய்கிறது , நகர வாழ்வின் தொடர் ஓட்டத்தின் நடுவில் மர நிழலாய் இருக்கிறது . தேடலின் விதையை தூவுகிறது . வரலாற்றின் முக்கியத்தை சொல்கிறது . இன்னும் எங்கெங்கோ அழைத்து செல்கிறது.அப்படித் தான் எங்கள் பகுதி சிறுவர்களுக்கு குழுவாக கதை சொல்லலாம் என்ற ஆசையும் வந்தது.

வெறும் மூன்று கதைகளை மூலத‌னமாக வைத்தே குருட்டு நம்பிக்கையில் ஆரம்பித்தது தான்.  சிறுவர்களுக்கான கதைகளை தேடி வாசிப்பு பழக்கம் நகர்ந்தது . தேட தேட தடையில்லாமல் கதைகள் கிடைத்துக் கொண்டேயிருந்தது. முதலில் நான் மட்டும் கதை சொல்ல பின்னர் நண்பர்கள் சிலரும் ஆர்வத்துடன் சேர்ந்துக்கொண்டனர்.  ஆனால் அனைத்து கதைகளிலும் நீதிப் போதனைகள் தூக்கலாகவே இருந்தது. சிறுவர்களுக்கு எப்பொழுதுமே நீதிப் போதனைகளுடன் தான் கதை சொல்ல வேண்டுமா ? அதுவும் கதையின் கடைசி வரி "Moral of the story is" என்று தான் முடிய வேண்டுமா ?

மெல்ல மெல்ல கதைகள் பற்றி பேசினோம் , கதைகளில் இது தான் நீதி என எதுவும் சொல்ல வேண்டாம் , நீதி என்பது கதைக்கு அத்தியாவசயமான ஒன்றல்ல . கதையின் போக்கில்  நல் கருத்துக்கள் இருக்கலாம் , அதை சிறுவர்களாகவே சிந்திக்க இடம் தருவோம் என்று முடிவு செய்தோம்.தற்பொழுது நீதிக்காக கதைகள் ஏதும் சொல்வதில்லை . கதையில் கருத்துக்கள் இருக்கிறதா என்பது பற்றி கூட அவ்வளவாக யாரும் அலட்டிக் கொள்வதில்லை.

வாரம் ஒரு நாள் அனைவராலும் நேரம் ஒதுக்க முடியுமா ? என்ற கேள்வி அடுத்து வந்தது . ஆனால் தொடர்ந்து ஒரு விஷயத்தை செய்வதன் மூலமே நாம் அதில் பயிற்சி பெற முடியும். சிறுவர்களுக்கும்  அவர்களது வாழ்வியலில் இது ஒரு அங்கமாக இருக்கும்.ஆதலால் அனைவராலும் பங்கெடுக்க முடியாவிட்டாலும் தொடர்ந்து செய்வோம் என முடிவெடுத்தது தான் இந்த ஒரு வருடத்தின் கிட்டதட்ட 28 நிகழ்வுகள் நடத்த முடிந்தது.இந்த 28 என்பது எண் மட்டுமல்ல , அது அழகிய அனுபவம்.

சென்னையில் கடந்த சனவரி மாதம் , எழுத்தாளர் விழியன் அவர்கள் தனது இல்லத்தில் சிறுவர் இலக்கியம் சார்ந்து பட்டறை ஒன்றை நடத்தினார்.அதில் நிறைய நண்பர்களை சந்திக்க நேர்ந்தது . நிறைய புத்தகங்கள் அறிமுகமானது , வெவ்வேறு தளங்களில் சிறுவர்களுக்காக இயங்கும் நண்பர்களின் அனுபங்கள் பகிரப்பட்டது.கத்துக்குட்டியாக நானும் சில நண்பர்களும் அங்கு இருந்தோம் என்று சொல்லலாம்.பாரம்பரிய விளையாட்டு , விளையாட்டு மூலம் அறிவியல் சோதனைகள் , கூத்துப் பாடல் , பொம்மலாட்டம் , இயற்கை சார்ந்து இயங்குவது என அனைத்து அனுபங்களும் பகிரப்பட்டது.எனக்கு உற்சாக பாணமாக அமைந்தது.அப்பொழுது தான் தமிழின் தற்கால சிறுவர் இலக்கியம் பற்றி சுகுமாரன் அவர்களது புத்தகம் அறிமுகமானது.அவரும் நிகழ்விற்கு வந்திருந்தார்.அந்தப் புத்தகம் சிறுவர் இலக்கியம் சார்ந்து நிறைய பேசியது.ஒரு காலத்தில் தமிழில் மாதம் 50 சிறுவர் இதழ்கள் வந்திருந்ததாம் , தற்பொழுது வெறும் 10 இதழ்கள் கூட வருகிறதா ? என்ற கேள்வி மனதை உருத்திக் கொண்டேயிருந்தது.எங்களது குழுவில் நண்பர் ஒருவர் தான் விகடன் மாணவர் பத்திருக்கையில் இயங்கியதாக சொன்னார் , இந்த இரண்டு விஷயங்கள் தான் பஞ்சுமிட்டாய் இதழ் என்று உருமாறியது. முதல் இதழில் பெரியவர்களின் படைப்பே அதிகம் இருந்தது . இரண்டாம் இதழில் சிறுவர்களின் படைப்பு  நுழைந்தது . சமீபத்தில்வெளியான் மூன்றாம் இதழில் சிறுவர்களின் படைப்பே அதிகம்.இனி வரும் இதழ்களும் அப்படியே அமைந்திடும்.

நிகழ்வு சார்ந்தே இதழை உருவாக்குகிறோம்.நிகழ்விலே சிறுவர்கள் கதைகள் சொல்கின்றனர்,தங்களது பயண அனுபவங்களை பகிர்கின்றனர்.நாங்கள் சொல்லும் கதைகளுக்கோ , புத்தகத்தில் வாசித்த கதைகளுக்கோ ஓவியம் வரைகின்றனர்.ஆக இதழுக்கு தேவையான அனைத்தும் எங்களுக்கு நிகழ்விலே கிடைத்துவிடுகிறது.இதழை வடிவமைக்கும் பணி மட்டும் எங்களுடையது.

கதைகள் அல்லாது , அவ்வப்பொழுது craft சார்ந்த நிகழ்வுகளையும் , தமிழ் எழுத்துக்கள் மூலம் புது புது விளையாட்டுகளையும் அறிமுகம் செய்தோம் . தேவையில்லாத ஆங்கில கலப்பு , சினிமா மற்றும்  தொழில்நுட்பம் மூன்றையும்  இந்தப் பயணத்தில் தவிர்த்திருக்கிறோம். இன்று திரும்பி பார்கையில் கொஞ்சம் ஆச்சரியமாக தான் இருக்கிறது.இன்றைய பெற்றோர்கள் சிறுவர்களுக்கு என்றதும் தங்களது கூச்சங்களை தவிர்த்து சிறுவர்களாய் மாற தயாராக இருக்கின்றனர். சிறுவர்களின் கை கோர்த்து "ஒரு குடம் தண்ணி ஊத்தி" விளையாடுகின்றனர் , ஆண் பெண் என்று பேரமெல்லாம் பாராமல் கும்மி பாடலுக்கு கும்மி அடித்து சிறுவர்களுடன் வட்டமிடுகின்றனர். அவர்களுடன் சேர்ந்து பாடுகின்றனர் . ஒரு குழுவாக சேர்ந்து செய்கையில் இவை அனைத்துமே சாத்தியமாகிறது.

பஞ்சுமிட்டாய் 3ம் இதழ் வெளியீட்டு  நிகழ்வில் அப்படித் தான் சிறுவர்கள் நாடகமும் , சிறுவர் பாடலுக்கு (சினிமா பாடல்கள் அல்ல) ஆட்டமும் அரங்கேறியது. நிகழ்வின் முடிவில் புதிதாய் வந்த சிறுவர்கள் அடுத்த நிகழ்வு எப்பொழுது என்று கேட்கும் போது மனம் எங்கோ சிறகை விரித்து பறந்தது.

Monday, November 7, 2016

தனி ஒருவர்....அழ.வள்ளியப்பா!

அழ.வள்ளியப்பா...சென்ற தலைமுறை தமிழ் பெற்றோருக்கு நன்கு பரிச்சயமான பெயர். சிறுவர் பாடல்கள் பற்றி பேச்சு எழும் போதெல்லாம் அவர்கள் சிறு வயதில் கேட்ட வள்ளியப்பா பாடல் ஒன்றை சொல்கின்றனர். இந்தத் தலைமுறை பெற்றோர் பல‌ருக்கு (எனை சுற்றியுள்ள) அழ.வள்ளியப்பா யாரென தெரியவில்லை. 90களில் டிவியின் தாக்கம் அதிகமானது ஒரு பெரிய காரணமாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு  "அணிலே அணிலே ஓடி வா"  , "தோ தோ நாய் குட்டி" , " மாம்பழமாம் மாம்பழம் " போன்ற பாடல்கள் நன்கு அறிந்திருக்கின்றனர் . அவர்களுக்கு  , சினிமா அல்லாத சிறுவர்களுக்கான‌ தமிழ் பாடல்கள் என்றதும் முதலில் நினைவிற்கு வருவது வள்ளியப்பாவின் பாடல்கள் தான்.

குழந்தை வளர்ப்பில் எப்படி சிறுவர் இலக்கியத்திற்கு பெரும் பங்கு உண்டோ , அதே போன்று தான் தமிழ் சிறுவர் இலக்கியத்தின் வளர்ச்சியில் வள்ளியப்பாவிற்கு பெரும் பங்குண்டு.அவர் இன்றி சிறுவர் இலக்கியம் உரு பெற்றிருக்காது என்று சொல்லலாம். தமிழ் சிறுவர் இலக்கியத்தின் பொற்காலம் எனும் கூறப்படும் 1950ம் ஆண்டு வள்ளியப்பா வாழ்ந்த காலம் தான். அந்த ஆண்டில் தான் குழந்தை எழுத்தாளர்கள் சங்கத்தை அமைத்தார். இதில்
குழந்தைக்களுக்கான படைப்புகளை உருவாக்கும் அனைவரையும் ஒன்று திரட்டினார் . அதன் செயல்பாடுகளின் ஒன்றாக , "குழந்தை எழுத்தாளர் யார் எவர்?" என்று ஒரு தொகுப்பை 1961ல் உருவாக்கியுள்ளனர் .  சங்கத்தின் சார்பில் தொடர்ந்து மாநாடுகள் நடந்திருக்கின்றன.

வள்ளியப்பா புதுக்கோட்டையை சேர்ந்தவர் , ஆனால் சென்னையில் வங்கி பணியிலிருந்தார் . சென்னையிலிருந்துக்கொண்டே புதுக்கோட்டையிலிருந்து சிறுவர் இதழ் வெளிவர அனைத்து வகையிலும் இயங்கியிருக்கிறார் . அச்சு வடிவத்திற்கான முன்னாலுள்ள அனைத்து வேலைகளையும் முடித்து புதுக்கோட்டைக்கு அனுப்பிவைத்துள்ளாராம். கிட்டத்தட்ட மாதம் 10 இதழ்களை கொண்டு வர ஈடுப்பட்டிருந்திருக்கிறார். இப்படித் தான் அவரது சிறுவர் இதழியலுக்கான பணி இப்படித் தான் சில ஆண்டுகள் சென்றிருக்கிறது. சிறுவர்களுக்கான பல படைப்புகள் மட்டுமல்ல , பல படைப்பாளிகளையும் உருவாக்கியுள்ளார்.

சிறுவர்களுடன் நெருங்கி பழகும் போது தான் புரிகிறது , அவர்கள் முற்றிலும் பெரியவர்களை கவனமாக பின்பற்றுகிறார்கள் என்பது. அதுப்போல் அவர்களுக்கான படைப்புகளும் மிக முக்கியமான இடத்தை பெருகிறது. படைப்புகளில் சிறுவர்களை திசைத் திருப்பும் எண்ணங்கள் எதுவும் வந்துவிட கூடாது என்பதில் வள்ளியப்பா கவனமாக இருந்திருக்கிறார்.ஒரு முறை தமிழ் சிறுவர் இலக்கியத்தில் துப்பாக்கி கலாச்சாரம் தலை தூக்கியிருக்கிறது, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். (அதன் எதிர்ப்பு எப்படி முடிவுற்றது என்பதை தேடிட வேண்டும்.) வள்ளியப்பா தான் மட்டும் இயங்காமல் தன்னைச் சுற்றி ஒரு வட்டத்தையும் பெரிதாக உருவாக்கியுள்ளார். அவர் வாழ்ந்த காலம் வரை சிறுவர் இலக்கிய மாநாடுகள் தொடர்ந்து நடந்திருக்கிறது. அவர் இறக்கும் போது சிறுவர் இதழான கோகுலத்திற்கு ஆசிரியராக இருந்துள்ளார்.

பூவண்ணன் எழுதிய வள்ளியப்பா பற்றின சிறு நூலை வாசித்தப் பொழுது மனதில் ஓடிய எண்ணம் இது தான் , தனி மனிதராய் மனுஷன் எப்படியெல்லாம் இயங்கியிருக்கிறார். நமது விருப்பங்களை நல்ல நண்பர்கள் கொண்டு கண்டிப்பாக உருமாற்றிக் கொள்ள முடியும் என்று வள்ளியப்பாவின் வாழ்வு எனக்கு சொல்வதாக இருந்தது.

இன்று நவம்பர் 7 , வள்ளியப்பா பிறந்த தினம் , வள்ளியப்பாவின் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் . அவரது நினைவாக சற்று டிவி யை அனைத்துவிட்டு வள்ளியப்பா பாடல்களை பிள்ளைகளுக்கு பாடி , சிறுவர்களை ஆட்டம் போட செய்வோம் . சிறுவர்களின் சிரிப்பொலியில் நன்றிகள் பல சிந்த செய்வோம்.

வள்ளியப்பாவின் படைப்புகள் மின்நூலாக : http://thamizhagam.net/nationalized%20books/Azha%20Valliyappaa.html

மலரும் உள்ளம் முதல் தொகுதியில் துவங்குகள் !

Friday, September 30, 2016

கொழுக்கு முழுக்கு தக்காளி

பாடல்கள் சிறுவர்களை எளிதாக உற்சாகப்படுத்துகிறது , ஆனால் அவர்களுக்கு என்ன பாடல்களை தந்துக்கொண்டிருக்கிறோம்.சினிமா பாடல்களே அதிகம் அவர்கள் கேட்கின்றனர்.சினிமா பாடல்களை விட எளிதானது சிறுவர் பாடல்கள் , அது அவர்களுக்காகவே படைக்கப்பட்டது.இரண்டு மூன்று தடவைகளில் சிறுவர்கள் அதனை தங்களதாக்கிக் கொள்கின்றனர்.அவர்களுக்கு அறிமுகம் செய்வது மட்டுமே பெரியவர்களின் கடமை...

சமீபத்தில் பாவண்ணன் அவர்கள் எழுதி மீசைக்கார பூனை அட்டகாசமான பாடல்களின் தொகுப்பு.அதிலுள்ள ஒரு பாடல் தான் கொழுக்கு முழுக்கு தக்காளி

இது தான் தற்பொழுது எங்கள் வீட்டில் ஓடிக்கொண்டிருக்கும் பாடல்.வீட்டிலிருக்கும் தக்காளியெல்லாம் தற்பொழுது தரையில் உருண்டுக்கொண்டிருக்கிறது.ஏனென்று கேட்டால்..

"அப்பா..காலு முளைச்சிடிச்சு பா.." என்று உடனே பதில் வருகிறது...

இது தான் அந்தப் பாடல்...


கொழுக்கு முழுக்கு தக்காளிக்கு
கால் முளைத்ததாம்
கூடத்திலிருந்து வாசலுக்கு
துள்ளிக் குதித்ததாம்
துள்ளிக் குதித்த தக்காளி
தூணில் இடித்ததாம்
தூணிலிருந்து சுவரை நோக்கி
உருண்டு போனதாம்
சுவரில் மோதி மரத்தில் மோதி
அலைந்து களைத்ததாம்
சுருண்டு கிடந்த நாயின் காலில்
இடித்து நின்றதாம்
திரும்பிப் பார்த்த கருப்பு நாய்க்கு
கோபம் வந்ததாம்
தக்காளியைக் கவ்விக்கொண்டு
ஓடி விட்டதாம்


ஆடியோ வடிவில் ..இதோ இங்கே...

மகள் தன்யஸ்ரீ பாடியது : https://soundcloud.com/prabhu-rajendran-1/ibg9kg1nmxkl

நான் பாடியது : https://soundcloud.com/prabhu-rajendran-1/jmsbqp7kecei

Monday, April 4, 2016

கதை சொல்லல் நிகழ்வு - அனுபவம்


முதன்முதலாக எங்களது கதை சொல்லல் நிகழ்வை திட்டமிட்டு நடத்தினோம்.ஐந்து நண்பர்கள் ஒன்று சேர்ந்து , நிகழ்வை எப்படி நடத்தலாம் , சென்ற சிறுவர் இதழ் உண்மையாகவே சிறுவர்களை சென்றடைந்ததா ? , இதழ் வேலைகளை கதை சொல்லல் நிகழ்வோடு எவ்வாறு இனைக்கலாம் என்று விவாதித்து; ஞாயிறு கதை சொல்லல் நிகழ்வை எவ்வாறு நடத்தலாம் என்று திட்டமிட்டோம்.அதன்படி சென்ற இதழில் வெளிவந்த விழியன் அவர்களின் "மயிலிறகு குட்டிப் போடுமா" என்ற கதையினை வாசித்து நிகழ்வை துவங்கினோம்.முதலில் மயிலிறகு என்றால் என்ன என்பதில் துவங்கி , "அது குட்டிப்போடும், அது தெரியுமா உங்களுக்கு?" என்று சின்ன அறிமுகத்தை தந்தப்பின்னர் வாசிப்பை துவங்கினேன்.வாசித்தது, சிறுவர்களுக்கும் இதழிற்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்திய மன நிறைவு தந்தது.அதன் பின்னர் "Magic Crayon" என்ற கதையை சொல்லத் துவங்கினேன்.

\
"கோடைவிடுமுறையில் உங்களைப் போன்று அந்தச் சிறுவனும் அவனது தாத்தா ஊருக்கு சென்றான்.அவனுக்கு வரைவது என்றால் மிகவும் பிடிக்கும்,எங்கு சென்றாலும் அவனது க்ரேயான்களை எடுத்துச் செல்வான்.ஆனால் தற்பொழுது ஊருக்கு செல்லும் போது க்ரேயான்களை எடுத்துச் செல்ல மறந்துவிட்டான்.தாத்தா ஊர் மிக அழகாக இருந்தது , அங்கு பார்ப்பதையெல்லாம் வரையவேண்டுமென்று அவனுக்கு மிகவும் ஆசை.ஆனால் வரைய க்ரேயான்கள் கிடைக்கவேயில்லை.அந்த ஊரில் ஒரே ஒரு கடை தான் அந்த கடையிலும் க்ரேயான்கள் இல்லை.மிகவும் கவலையானான்.தாத்தாவிடம் அழுதுக்கொண்டே தனக்கு க்ரேயான் வேண்டுமென்றான்.தாத்தா அவனை ரகசியமாக ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார்.அங்கு ஒரு மரப்பெட்டி இருந்தது.அதிலிருந்து "கரி" ஒன்றை எடுத்து தந்து..இது "மந்திரக் கரி" என்றார்.அவனுக்கு புரியவில்லை.சிறிது யோசித்துவிட்டு .."ஓ...Magic Crayon ஆ" என்றான்.ஆமாம்..ஆமாம் அதே தான். இதை வைத்து வரைந்தால் அது நிஜ உலகத்திற்கு அப்படியே வந்துவிடும் , ஆதலால் இதை பத்திரமாக வைத்துக்கொண்டு வரையவேண்டும் என்று சொல்லிவிட்டு அவனிடம் தந்தார்.அதை வாங்கியதிலிருந்து அவனுக்கு மிகுந்த ஆர்வம்,என்ன வரையலாம் என்று யோசித்துக்கொண்டேயிருந்தான்." என்று சொல்லிவிட்டு இளங்கோ அவர்கள் மொழிப்பெயர்த்த கதையினை சொல்லத் துவங்கினேன்.

கதையை அவர்கள் முழுவதுமாக மகிழ்ந்தார்கள்.அதனை மேலும் தூண்டும் விதமாக திட்டமிட்டப்படி , "இப்போ அந்த Magic Crayon உங்களுக்கு கிடைத்தான் என்ன வரைவிங்க " என்றதும் ஒரு சிறுவன் டைனோசர் என்றான்.சரி நீங்க வரைங்க நான் பாக்குறேன்" என்ற ஒதுங்கிக்கொண்டேன்.சிறுவர்களுக்கு பெற்றோர்கள் உதவ வேண்டாம்,அவர்களை சுதந்திரமாக வரையட்டும் என்று சொன்னோம்.15 நிமிடத்தில் அழகான ஓவியங்கள் உருவானது.சிறுவர்கள் தங்களது ஓவியத்திற்கு சிறு விளக்கமும் தந்தனர்.சிறுவர்களே ஓவியங்களை வைத்து கதை சொல்ல வைப்பது தான் எங்கள் திட்டம்.ஆனால் சிறுவர்களுக்கு சின்ன சின்ன கூச்சங்கள் இருந்தது.ஆதலால் எங்களால் அதை செய்ய முடியவில்லை.இந்த யோசனை எனக்கு உருவாக்கி தந்தது நண்பர் விஷ்ணுபுரம் சரவணன்.அவர் இதுப்போன்று நிகழ்வினை நடத்தியிருக்கிறார்.இங்கு அதுப்போன்று செய்ய எத்தனித்தோம் , ஆனால் அதை செய்ய முடியவில்லை.ஆதலால் சிறுவர்களுக்கு ஒரு உதாரணமாக நிகழ்வினை மாற்றினோம்.நண்பர் ராஜேஷ் இந்த ஓவியங்களை வைத்து அழகான கதையினை அதே இடத்தில் உருவாக்கினார்.தங்களது ஓவியங்கள் கதையினுள் எப்படி மாறுகிறது என்பதை கேட்க சிறுவர்களுக்கு மிகுந்த ஆர்வம்.கதையினை ரசித்தனர்.அது மன நிறைவாக அமைந்தது.எங்களது அடுத்த இதழுக்கு; அருமையான ஓவியங்களும்,அற்புதமான கதையும் கிடைத்தது.அவரது கதையிலும் மயிலிறகும் , "Magic Crayon"  -னும் இடம்பெற்றது.


வெறும் 4 கதைகளை வைத்துக்கொண்டு எந்தவித அனுபவமில்லாமல் கதை சொல்வதை துவங்கினேன்.ஆனால் தற்பொழுது கதை சொல்லவும்,நிகழ்வினை தொடர்ந்து நடத்த நண்பர்களும் தயாராக இருக்கின்றனர்.3 மாத காலத்தில் நிகழ்விற்கு நல்ல உருவம் கிடைத்திருக்கிறது.மனமும் ஆர்வமும் மட்டும் இருந்தால் போதும் எதையும் செய்யலாம் என்று எனக்கு நானே நிருபித்ததுப்போல் இருக்கிறது.

Monday, February 29, 2016

அவள் சொன்ன கதைகள்

இவையெல்லாம் தன்யா கடந்து இரண்டு நாட்களில் சொன்னக் கதைகள்.சிலக்கதைகள் நீண்டு இருக்கிறது , சில கதைகள் சட்டென்று முடிந்துவிடுகிறது.நீண்ட கதைகளில் பாடல்,ஆட்டம்,ஏகப்பட்ட நிகழ்வுகள் நிறைந்தது.அதை பதியமுடியவில்லை.அவளது குட்டிக்கதைகளை இங்கு முழுவதுமாகவும் , அதிகம் மாற்றம் இல்லாமலும் பதிய முயற்சித்திருக்கிறேன்.

கொசு கடிச்சிடிச்சு


தன்யாவை கொசு ஒன்னு கடிச்சிடிச்சு , இரத்தம் வேற வந்திடிச்சு.சிங்கமும் புலியும் வந்து "நாங்க கடிக்கல தன்யா.கொசு தான் கடிச்சிடிச்சு" அப்படின்னு சொன்னிச்சு.உடனே கொசுக்கு ஃபோன் பண்ணி "ஏன் தன்யாவை கடிச்ச?இனிமே கடிக்கக் கூடாது" என்று சொன்னாங்.அழுவாதே தன்யஸ்ரீ,உனக்கு ஒன்னுமில்லைன்னு டாக்டர்ஸ்லாம் சொன்னாங்க.அப்புறம் சரியாடிச்சு.


சூச்சு


ஒரு ஊர்ல மீன் இருந்துச்சாம்.அது படுக்கையில்(பெட்லையே) சூச்சு போச்சாம்.அவுங்க அம்மா வந்து சொன்னாங்களாம்.."இப்படி பெட்ல எல்லாம் போகக் கூடாது,toilet தான் போகனும்".அடுத்த தடவை சூச்சு வந்தப்போ அப்பாக்கிட்ட மீன் சொன்னுச்சாம்.அப்பா மீன் "wait பண்ணுமா." சொல்லிட்டு அம்மா மீனை கூப்பிட்டாங்களாம்.அம்மா மீன் வந்து கூட்டிட்டு போனாங்களாம்.கால் அலம்பிவிட்டு திரும்ப வந்துச்சாம்.


காக்கா கதை


ஒரு ஊர்ல காக்கா ஒன்னு இருந்துச்சாம்.அந்தக் காக்கா துப்புச்சாம்.உடனே அப்பா காக்கா வந்து கிள்ளிடிச்சாம்.அவுங்க அம்மா காக்கா.."இனிமே துப்பக் கூடாது,ப்ரஷ் பண்றப்ப மட்டும் தான் துப்பனும்னு சொன்னாங்களாம்"..அப்புறம் அந்தக் குட்டிக் காக்கா தூங்கிடிச்சாம்.கதை முடிஞ்சிடிச்சாம்.

Friday, February 12, 2016

தீனபந்து

கரும்புத் தோட்டத்திலே - ஆ!
கரும்புத் தோட்டத்திலே

கரும்புத் தோட்டத்திலே - அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்து கின்றனரே! ஹிந்து
மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய்
சுருங்குகின்றனரே - அவர்
துன்பத்தை நீக்க வழியில்லையோ? ஒரு
மருந்திதற் கிலையோ? - செக்கு
மாடுகள் போலுழைத் தேங்குகின்றார், அந்தக் (கரும்புத்தோட்டத்திலே)

- பாரதி

இந்தப் பாடல் பிஜி தீவில் அவதிப்படும் இந்தியப் பெண்களின் நிலையைக் கண்டு என் தல (அதான்பா பாரதி) புதுச்சேரி கடலில் இரவெல்லாம் உறக்கமின்றி தவித்து மனம் வருந்தி பாடிய பாடல்.ஆங்கிலேய ஆட்சியிலிருந்த விலை அடிமை முறைக்கு எதிர்ப்பு வரவே , அவர்கள் அதனை ஒழித்துவிட்டதாகக் கூறு புதிய திட்டத்தை அறிமுகம் செய்தனர்.அதன் பெயர் ஒப்பந்த முறை திட்டம்.ஒப்பந்த முறையில் (Contract) நம்மவர்கள் வெளிநாட்டிற்கு அடிமைகளாய் அனுப்பப்பட்டனர்.அனுப்பப்பட்டனர் என்று சொல்வதை விட கடத்தப்பட்டனர் என்று சொன்னால் பொறுத்தமாக இருக்கும்.அதற்காக கங்கானிகள் இருந்தனர்.பொய் சொல்லி மக்களை கவர்ந்து அவர்களை அடிமைகளாய் நாடு கடத்துவது தான் இவர்களது வேலை.அப்படித் தான் பிஜி தீவிலுள்ள சக்கரை ஆலைகளுக்கு அடிமைகளாய் நாடு கடத்தப்பட்டனர்.அவர்களது துயரத்தை கேட்டுத் தான் பாரதி இவ்வாறு பாடியுள்ளார்.

பாரதியின் மனதில் இவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு நமது தீனபந்துவிற்கு(அதானே நம்ம தலைப்பு) ஒரு முக்கிய பங்கு இருக்கிறது.காந்தி அடிமைத்தனத்தை எதிர்த்து தென்னாப்பிரிக்காவில் போராட்டம் நடத்த , அதனைத் தொடர்ந்து கோகுலே இந்தியாவில் போராட்டத்தை துவங்குகிறார்.நிதி திரட்ட பல்வேறு இடங்களில் பேசுகிறார்.அப்படி அவரது பேச்சினை கேட்ட ஆங்கிலேயர் ஒருவர் தனது எதிர்கால சேமிப்பெல்லாம் இந்த போராட்டத்திற்கு உதவட்டும் என்று கொடுக்கிறார்.1915ல் கோகுலே இறக்க , அந்தப் போராட்டத்தை தனது கையில் எடுக்கிறார்.அவர் தான் நம்ம தீனபந்து.ஆங்கிலேயருக்கு தீனபந்து என்ற பெயரா? என்று வியக்க வேண்டாம்.அவரது இயற்பெயர் C.F.Andrew , அவரது உள்ளத்தினை அறிந்த காந்தி அவருக்கு தீனபந்து என்று பெயர் வைக்கிறார்.தீனபந்து என்பதற்கு ஏழைகளின் நண்பன் என்று பொருள்.

பிஜி தீவில் ஒப்பந்த கூலிகளாக சென்றவர்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் என்பதை  C.F.Andrews & W.W.Pearson இருவரும் நேரில் ஆய்வு 
C.F.Andrews
செய்தனர்.மக்களிடம் பேசி திரும்பியதும் உடனே அதனை "Report on Indentured Labour in Fiji - An independent Enquiry" புத்தகமாக வெளியிடுகின்றனர்.இந்தப் புத்தகம் இணையத்தில் கிடைக்கிறது.400+ பக்கங்கள் , முதல் 50 பக்கங்களை கடந்திருக்கிறேன்.கங்கானிகள் மூலம் மக்கள் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர்,அவர்களின் மனநிலை,ஏமாற்றம் என அங்குள்ள மக்களைப் பற்றின தகவல்களும் , தங்களது ஆய்வின் கருத்துகளையும் பதிந்திருக்கின்றனர்.இதனை வாசிக்கும் பொழுது எரியும் பனிகாடு  நாவலும் , 12 years a slave திரைப்படமும் ஏற்படுத்திய தாக்கம் நினைவிற்கு வந்தது.நான் வாசித்த வரை அதில் பிஜி தீவில் நமது மக்களின் மனநிலை எப்படியிருக்கிறது,அங்கு நடக்கும் குற்றங்களுக்கு என்ன காரணம்,அதனை பிஜி அரசாங்கம் எப்படி பார்க்கிறது,அங்கு நம் மக்கள் நல்லபடியாக வாழ என்ன வழி பற்றி அவர்களது ஆய்வு பேசுகிறது.

பிஜி தீவில் வட இந்தியர்களே முதலில் அதிகம் சென்றிருக்கின்றனர்,காலப்போக்கில் அவர்களது எண்ணிக்கை குறைய 
தென் இந்தியர்கள் சென்றிருக்கின்றனர்.ஹிந்துஸ்தானி தெரிந்தவர்களிடம் அதிகம் பேசியுள்ளனர் , ஹிந்துஸ்தானி தெரிந்த தமிழர்களுடனும் பேசியுள்ளனர்,ஹிந்துஸ்தானி தெரியாததால் தமிழர்களிடனும் மற்ற‌ தென் இந்தியர்களுடனும் பேச முடியாமல் போகிறது.இந்திய நிலப்பரப்பில் மதராஸ் மாநிலத்தில் தான் குறைந்த அளவு தற்கொலைகள் பதிவாகியுள்ளதாகவும் ஆனால் பிஜி தீவில் தற்கொலையில் அதிகமான எண்ணிக்கையில் மதராஸ் மாகாணத்தை சேர்ந்தவர்கள் இருந்திருக்கின்றனர்.இந்த ஆய்வில் எனக்கு மிகவும் முக்கியமாக‌ தோன்றியது இந்த வரிகள்...

under the existing system of indian labour immigration there is a great disproportion between number of males and females.That this disproportion is mostly responsible for the abnormal number of murders and kindred crimes among Indians.That the majority of those found guilty of such crimes are otherwise quite and law abiding;and the murders for which they are condemned to death,are not due to any murderous instinct in them,but really to sexual jealousy.

பாலியல் வறட்சியால் ஏற்படும் பொறாமையே அங்கு நடக்கும் குற்றங்களுக்கும் தற்கொலைகளுக்கும் காரணம் என்று ஆய்வில் சொல்கின்றனர்.இதை வாசிக்கும் போது தற்பொழுது நமது தேசத்தில் நடக்கும் பாலியல் குற்றங்களோடு ஒப்பிட்டுப் பார்க்க தோன்றுகிறது.அதோடு மட்டுமில்லாமல் மக்கள் தங்களது மதத்தை கைவிட்டதே இதற்கு மிக முக்கிய காரணமாக சொல்கின்றனர்.ஒருவனுக்கு ஒருத்தி என்பதே அங்கு இல்லை,அடிமைத் தனத்திலிருந்து வெளியில் வந்தவர்களும் அதனை பின்பற்றவில்லை, இதற்கெல்லாம் காரணம் மக்கள் இழந்த மத நம்பிக்கைகளே என்று கூறுகின்றனர்.ஆதலால் பிஜி அரசாங்கத்திற்கு மக்களின் மத நம்பிக்கைகள் மீது கவனம் செலுத்த சொல்கின்றனர்.இந்துக்களை கசாப்பு கடைகளுக்கு அனுப்புவதை தவிர்த்துவிடுங்கள் என்று பரிந்துரைக்கின்றனர்.ஒப்பந்த ஊழியர்கள் நலமாக வாழ கல்வி,மதம்,ஆண்-பெண் எண்ணிக்கையில் கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்கின்றனர்.இவர்களது ஆய்வு ஆங்கிலேயர் மற்றும் பிஜி அரசாங்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்திருக்கும் என்று புரிந்துக்கொள்ள முடிகிறது. 

மக்களுக்கு அங்கு உதவ போதுமான மருத்துவ வசதிகள் இல்லை , மதம் சம்மந்தமான எந்தவித தொடர்பும் இல்லை ஆதலால் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் . கல்வி என்றதே அங்குள்ள சிறுவர்களுக்கு கிடையாது ஆங்காங்கே கல்விற்கு உதவ சில கிறுத்துவ அமைப்புகள் செயல்பட்டிறுக்கின்றன ஆனால் அவை மக்களை அவரவர் மதத்தினை பின்பற்ற தடையாக இருக்கலாம்,ஆதால் பிஜி அரசாங்கம் இம்மக்களின் கல்வியினைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்று ஆய்வு கூறுகிறது .மக்களின் சுய நெறிமுறைகளை மீட்டெடுப்பதின் அவசியத்தையும் அதற்கு ஒரே வழியாக அமைய மக்கள் தங்களது மதத்தினை பின்பற்ற வேண்டும் என்று வழியுறுத்துகிறார்கள்.பெரியார் ஒருப்பக்கம் மதம் மனிதனை வளர்க்கவில்லை என்று குற்றம் சாட்டுக்கின்றார் , மறுப்பக்கம் மனிதன் தனது நிலைப்பாட்டை இழந்து தவிப்பதற்கு காரணமாக மதமில்லாததை கூறுகின்றது வரலாறு.

தேடலில் ஆர்வமுள்ளவர்களுக்கு வரலாறு ஒரு சிறந்த ஆடுகளமாகவே இருக்கிறது.பாரதிப் பற்றி வாசிக்க ஆரம்பித்தேன் அது என்னை தீனபந்துவிடம் வந்து சேர்த்திருக்கிறது.வரலாற்றை தாறுமாறாக பள்ளி வயதில் திட்டியவன் நான் , ஆனால் தற்பொழுது வரலாற்றுடன் தொடந்து பயணம் செய்ய ஆயத்தமாக இருக்கிறேன்.

வெறும் 50 பக்கம் வாசித்துவிட்டு தீனபந்துவைப் பற்றி இன்று அவசர அவசரமாக எழுத காரணமிருக்கிறது.இன்று தீனபந்துவின் பிறந்தநாள்.











Wednesday, February 3, 2016

இதுக்காக சென்னை போறீங்களா?

"இதுக்காக சென்னை போறீங்களா?" , எழுத்தாளர் விழியன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கதை சொல்லிகளின் பட்டறை நிகழ்வுக்கு செல்கிறேன் என்றதும் நான் எதிர்கொண்ட கேள்வி இது மட்டுமே.கதை சொல்வதின் முக்கியத்துவம் நமது சமூகத்தில் அவ்வளவே! என்று சாட்சியாகவே இந்தக் கேள்வி என்முன் நிற்கிறது.ரி அதை விடுங்க...விழியனின் இல்லத்தில் சென்ற வாரம் தான் இந்த நிகழ்வு நடந்தது.வேறு மாநிலத்திலிருந்த வருபவர் பட்டியலில் நான் மட்டுமிருக்க எனக்கு துனையாக மும்பையிலிருந்து தோழி ஒருவர் வந்திருந்தார்.எங்களைப் போன்ற ஆட்களால் தான் தமிழகத்தினுள் நடக்கும் நிகழ்வுகள்  தேசியமயமாக்கப்படுகிறது என்று நாங்கள் மனதினுள் பெருமைப்பட்டுக்கொண்டோம்.இந்த நிகழ்விற்கு  கதை சொல்லிகள்,ஆசிரியர்கள்,பள்ளி முதல்வர்கள்,எழுத்தாளர்கள்,பாரம்பரிய விளையாட்டுகளை தேடுவதில் ஆர்வம் கொண்ட நண்பர்கள்,இளம் இயக்குனர்,நடிகர்,பொம்மலாட்டம் நிபுனர்,பெற்றோர்கள் என வெவ்வேறு துறைசேர்ந்தவர்கள் வந்திருந்தனர்.

தனியொருவனாக மகளுக்கு கதை சொல்லத் துவங்கி , பின்னர்  அப்பார்ட்மெண்டில் சில நண்பர்களுடன் 10-12 சிறுவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக கதை சொல்லிக்கொண்டிருக்கிறேன்.கதை சொல்வதில் எங்களுக்கு சில சிக்கல்களும் சந்தேகங்களும் ஏற்பட்டிருந்தது,
  •  பலதரப்பட்ட வயதினர் இருக்கும் இடத்தில் அனைவருக்கும் பிடித்தவாறு எவ்வாறு கதை சொல்வது
  • கதைக்களுக்கு நடுவில் விளையாட்டுகளை எவ்வாறு சேர்ப்பது , என்னென்ன விளையாட்டுகள் இருக்கிறது
  • நீதிப்போதனைகள் தாண்டி எவ்வாறு கதை சொல்வது.
  • ஆர்வமுள்ள அனைவரையும் எவ்வாறு  கதை சொல்ல வைப்பது
  • பெங்களூர் என்பதால் , தமிழை சிறுவர்கள் படிப்பதில்லை.அதற்கு ஏதாவது செய்ய முடியுமா?
  • சிறுவர்களை எவ்வாறு கதைச் சொல்ல தூண்டுவது (ஆர்வம் இருப்பின்)
என எங்கள் பட்டியல் நீள்கிறது.இதுப் போன்ற பட்டியல் கதை சொல்ல துவங்கியிருக்கும் ஒவ்வொரிடமும் இருக்கிறது என்பதை இந்தப் பட்டறை மூலம் தெரிந்துக் கொண்டேன்.இந்தக் கேள்விகளுக்கு விடைகாணும் விதமாகவே இந்தப் பட்டறை அமைந்தது.

சிறுவர்களுக்கு கதைகள் தேவையா ? தேவையென்றால் எதற்காக ? என்று சனி மாலை துவங்கிய கலந்துரையாடல் அடுத்த மாதம் கதை சொல்லிகளுக்காக பயிற்சி பட்டறை நடத்தலாம் என்ற முடிவுடன் ஞாயிறு மாலை நிறைவுப்பெற்றது.கலந்துரையாடலுக்கு மிகவும் உறுதுனையாக இருந்தது நண்பர்கள் இறக்குமதி செய்ததிண்பண்டங்கள்.கமர்கட்டு,புளிப்பு மிட்டாய்,மும்பையிலிருந்து ஜவ்வரசி வத்தல்,பிஸ்கட் பாக்கெட்டுகள்,முருக்கு,பழங்கள்,தேனீர் என அசத்தியிருந்தார்கள்.வெவ்வேறு திசையில் விவாதஙள் செல்லும் போது அனைவரையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைத்தது இவையே.

தமிழ்நாட்டிலுள்ள கதை கேட்கும் ஆர்வமுள்ள சிறுவர்கள் சில ஆயிரம் இருப்பர் என்று கணக்கிட்டோம்.அந்த சில ஆயிரம் சிறுவர்களை நோக்கி நாம் பயணிப்போம் என்பதில் அனைவரும் தெளிவாக இருந்தோம்.எழுத்தாளர் சுகுமாரன் அவர்கள் இந்தப் பயணத்தில் நூலகத்தின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.தமிழகத்தில் இதுவரை ஏன் சிறுவர்களுக்காக தனி நூலகம் அமையவில்லை? ஏற்கனவே நடைபெறும் நூலகத்திலும் ஏன் சிறுவர்களுக்காக தனியிடம் ஒதுக்கப்படுவதில்லை?சிறுவர்களின் மேம்பாட்டில் எந்தவித கவனமும் செலுத்தாமால் நாட்டின் முன்னேற்றேத்தைப் பற்றி பேசுவது எவ்வாறு சாத்தியமாகும்.இவ்வாறு எங்கள் பேச்சு சூடுப்பிடித்தது.

எங்கள் சூட்டை தணிக்க , நிகழ்விற்கு வந்திருந்த சிறுவன் கதையொன்றை சொன்னான்,சொன்னான் என்பதைவிட‌ கதையினுள் எங்களை இட்டுச்சென்றான் என்றே சொல்ல வேண்டும்.கதை ஒருவனின் கற்பனையை எங்கெல்லாம் இட்டுச்செல்லும் என்பதற்கு அவனே அங்கு சாட்சியாக அமர்ந்திருந்தான்.அவனது மொழியும்,அவனது கதை நிகழ்வும்,அந்த கதையின் முடிவும் எங்களை கட்டிப்போட்டது.அந்த சுட்டியின் கதையை தொடர்ந்து வந்திருந்த அனைவரும் கதைச் சொல்லத் துவங்கினோம்.நாம் காலம் காலாமாக அரைத்துக் கொண்டிருக்கும் காக்கா கதையை எவ்வாறு வேறுவிதமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லலாம் என் நண்பர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தார்கள்.
முக்கியமாக வடையின் பார்வையில்,காக்காவின் பார்வையில் சொன்ன‌  கதைகள் இன்னும் மனதில் சுற்றிக் கொண்டிருக்கிறது.

மலர்விழி அக்கா சொன்ன வவ்வாள் கதை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.அவர்களது மொழி மழலையர்களுக்காகவே உருவானது."ஒரு குட்டி பாப்பா" , "துட்டு எடுத்துன்னு வா" என்ற வார்த்தைகளை அவர்கள் மழலை மொழியில் சொல்லும் அழகை கேட்டு நான் அங்கணமே அவரது ரசிகனாகிவிட்டேன்.

அடுத்து பொம்மலாட்டம் கலைஞர் கலைவாணன் அவர்கள் தனது அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்,சிறுவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்,பள்ளிகளின் மெத்தப் போக்கு எனமெய்சிலிர்க்க வைக்கும் பேச்சாக அது அமைந்தது.மதிய உணவு முடிந்ததும் ஒரு துடிதுடிப்பான பாடலை பாடி அனைவரையும் கலகலக்க வைத்தார்.அவரது அனுபவங்களை தனி பதிவாக எழுதலாம்,அவர் சொன்ன மாங்காய் தோட்டகதை , அப்பாவிற்கு சட்டை அளவு எடுத்துட்டாங்க கதை போன்றவை நிஜ வாழ்வின் அப்பட்டங்களை கண் முன் நிறுத்தியது.

பஞ்சாயத்து தலைவரா (உடையிலும்) விழியனும் , வாத்து ராஜா புகழ் விஷ்ணுபுரம் சரவணனும் இந்த நிகழ்வை அழகாக நடத்திச் சென்றனர்.சரவணன் ஒவ்வொரு தலைப்பிலும்  தனது கருத்தையும் , பேச வேண்டியதையும் மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்.வெவ்வேறு வயது சிறுவர்கள் இருக்கும் இடத்தில் கதை சொல்லிகளுக்கு என்ன விதமான இடைஞ்சல்களை சந்திக்க நேரிடும்,அதை எவ்வாறு சமாளிப்பது போன்ற அனுபவங்களை பகிர்ந்தார்.தொடர் கதை சொல்லும் முறை அனுபவங்கள் மூலமாக சிறுவர்களின் கற்பனை திறன் பற்றி பேசினார்.தொடர்ந்து கதை சொல்லும் போது அதில் எவ்வாறு சிறு சிறு அறிவியல் விளக்கங்களை சேர்ப்பது பற்றியும் விவாதித்தோம்.அறிவு அதை செயல்வடிவமாகவே அங்கு செய்துகாட்டினார்.அனைவரையும் தனது பேச்சாலும்,முக பாவனைகளாலும் கட்டிப்போட்டார்.அதைப்போன்று இனியன் பாரம்பரிய விளையாட்டுகள் பற்றி பேசினார்.ஜாதிய வேறுபாடுகளை விளையாட்டு மூலம் குறைக்கலாம் என்ற தனது அனுபவங்களை பகிர்ந்தார்.

கதைக்கு நீதி போதனை அவசியமா , என்ற தலைப்பிலும் விவாதித்தோம்.பெற்றோருக்கு தனது பிள்ளைகளை நல்வழிப்படுத்தவும்,ஆசிரியர் பார்வையில் அவர்களுக்கு பாடம் கற்பிக்கவும்,சில நற்பண்புகளை அவர்களுக்குள் ஏற்படுத்தவும் அவை தேவை என்றும்.ஆனால் ஒரு கதைக்கு நீதி போதனை அவசியமானதாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை என்றும்.கதையின் போக்கில் அவை இருந்தால் போதும் , அதற்காக கதையை உருவாக்குவதை தவிர்க்கலாம் என்றும் பேசினோம்.ஒவ்வொரு முறை கதை சொல்லி முடித்துவிட்டு சிறுவர்களுக்கு "இதிலிருந்து நாம் என்ன தெரிஞ்சிக்கிட்டோம் " என்று சொல்ல அவசியமில்லை.அவர்களே அதை சிந்திக்கும் இடத்தினை நாம் அவர்களுக்கு தர வேண்டும் என்றும் எங்கள் பேச்சு சென்றது.இத்துடன் அனுபவமிக்க கதை சொல்லிகளான நவீன்,சதீஸ்,சக்தி (மேலும் சில நண்பர்கள் ..மன்னிக்கவும் பெயர் நினைவில் இல்லை) கதை சொல்லும் போது அனைவரது கவனத்தை பெற என்னென்ன யுக்திக்களை பயன்படுத்தலாம் என்று சொன்னார்கள்.கோமாளி வேஷமிடுவது,முகத்தில் சாயம் பூசுவது, சிற்சில செயல்பாடுகள் செய்வது எனது செய்துக்காட்டினர்.

சிறுவர்களுக்கு பாடல்கள் மீது இருக்கும் விருப்பத்தைப் பற்றியும் .அழ.வள்ளியப்பாவை தாண்டி நம்மிடம் என்னென்ன பாடல்கள் இருக்கின்றது என்றும் பேசினோம்.பாவேந்தர் பள்ளி வெற்றிச் செழியன் அவர்களது நூலிருந்து சில பாடல்களை அவரே பாடிக் காட்டினார்.வந்திருந்த அனைவரிட‌த்திலும் ஒரு மிகப்பெரிய ஒற்றுமையை கவனிக்க நேர்ந்தது , அனைவரும் வாசிப்பின் மீது தீரா காதல் கொண்டவர்கள்.எஸ்.ராவின் கிறுகிறு வானம்,கி.ரா வின் நாட்டுப்புற கதைகள் மூலம்  சிறுவர்களுக்கு கதைகளை உருவாக்கிய அனுபங்களை நண்பர்கள் பகிர்ந்தனர். 

சனி இரவு விழியனின் தந்தை எங்களில் கலந்துரையாடலில் கலந்துக் கொண்டார்.அவரது முதல் கேள்வியே இவ்வாறு அமைந்தது.."சென்ற முறையும் இவ்வாறு பேசினோம் , ஆனால் ஏதாவது செயல் உருவம் பெற்றதா?இந்த முறை அதை கவனத்தில் கொண்டு உங்கள் நிகழ்வை துவங்குங்கள் " என்றார்.எங்கள் மனதில் அவரது கேள்வி ஆழமாக பதிந்திருந்தது.ஆதலால் தான் எங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை உடனே திட்டமிட்டோம்.காவேரி மாணிக்கம் தனது இரண்டாவது "ஒரே ஒரு ஊரிலே" கதை சொல்லும் நிகழ்வே நடத்த அங்கையே திட்டமிட்டார்.(வரும் 6ம் தேதி மாலை 5-7 மணிக்கு பெரியார் திடலில் நடக்கயிருக்கிறது).கதை சொல்லிகளுக்கான ஒரு கூட்டு பயிற்சிப் பட்டறை மார்ச் மாதத்தில் நடத்தவும் முடிவு செய்தோம்.அத்துடன் நிகழ்வை முடித்துக்கொண்டு சங்கத்தை கலைத்தோம்.வீடு திரும்பினோம்.



பெங்களூர் திரும்புகையில் , சமீபத்தில் நான் வாசித்த ரேன்டி பாஷின் "இறுதிச் சொற்பொழிவு" என்ற நூலில் இடம்பெறிருந்த இவ்வார்த்தைகளுடன்  நிகழ்வின் அனுபங்களை மனம் ஒப்பிட்டுக்கொண்டேயிருந்தது.

[Virtual reality துறையில் பேராசிரியராக இருக்கும் ரேன்டி தனது மாணவர்களுக்காக பட்டறை ஒன்றை உருவாக்கிய அனுபவங்களை இவ்வாறு விவரிக்கிறார்.]

"ந‌டிகர்கள்,ஆங்கிலத்தை முக்கியப் பாடமாக எடுத்துப் படித்த மாணவர்கள்,சிற்பிகள்,பொறியியலாளர்கள்,கணிதத்தை முக்கியப் பாடமாக எடுத்திருந்தவர்கள்,கணினித் துறையைச் சேர்ந்த அறிவுஜீவிகள் ஆகியோர் எங்கள் பயிற்சித் திட்டத்தில் பங்கு கொண்டனர்.இத்திட்டம் மட்டும் இல்லாமல் போயிருந்தால் , இம்மாணவர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதற்கான வாய்ப்பு இவர்களுக்கு ஒருபோதும் வாய்த்திருக்காது,அவர்கள் அவரவர் வேலைகளில் மூழ்கியிருப்பார்கள்.நாங்கள் இவர்களை சிறு சிறு குழுக்களாக்கினோம்.தனியொருவராகச் சாதிக்க முடியாதவற்றை மற்றவர்களுடன் சேர்ந்து செய்யும் கட்டாயத்திற்கு இவர்கள் ஆளானார்கள்."