Monday, December 29, 2014

2014 வாசிப்பு - சிறுவர் இலக்கியம்

 சிறுவர் இலக்கியத்தில் இரண்டு சின்ன பிரிவுகள் இருக்கின்றது. அவை குழந்தைகள் இலக்கியம் மற்றும் சிறுவர் இலக்கியம். குழந்தைகள் இலக்கியம் எனப்படுவது எட்டு வயது வரையிலான குழந்தைகளுக்கான புத்தகங்கள். பெரும்பாலும் இவை பெற்றோர்களால் வாசித்து காட்டவேண்டியதாகவே இருக்கும். இந்த புத்தகங்கள் ஒரு மாய உலகினை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும். எந்த விஷயத்தையும் ஆழமாக பேசாமல் அறிமுகத்தோடு நிறுத்திக்கொள்ளும். தாங்கள் புழங்கும் உலகில் உள்ள சின்னச் சின்ன விஷயங்களை அறிமுகப்படுத்தும். விலங்குகள் பேசுவது போன்ற கதைகள் வரும். மொத்தத்தில் ஒரு பேண்டசி உலகினை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும்.
மற்ற எல்லா எழுத்தும், புத்தகமும் சிறுவர்களுக்கானது. அது சிறுவர் இலக்கியம். இங்கே கதைகள் நிஜத்திற்கு நெருக்கமாக இருக்கும், இன்னும் ஆழமான மாய உலகினை காட்டும், அறிவியல் கட்டுரைகள், நாவல்கள், கதைகள், மற்றும் இன்னபிற வடிவங்கள் சிறுவர்களுக்கு தேவை. 

‍- உமாநாத் - சிறுவர் இலக்கிய எழுத்தாளர்.


இந்த இரண்டு பிரிவுகள் அல்லாது மூன்றாவதாக சிறுவர்கள் உலகினை தெரிந்துக்கொள்ள பெற்றோர்களுக்கு உதவும் புத்தகத்தினையும் இங்கு பகிர்ந்துள்ளேன்.

5.பென்சில்களின் அட்டகாசம் - விழியன் ( குழந்தைகள் இலக்கியம் )




 சிறுவர்களுக்கு எனது முதல் தேர்வாக இருக்கும் புத்தகமிது. கதையோடு அழகிய படங்களும் உண்டு.எனது மகளுக்கு அந்த படத்தினை வைத்து தான் நான் கதை சொன்னேன்.வகுப்பில் அனைத்து பென்சில்களும் பள்ளி முடிந்ததும் யாருக்கும் தெரியாமல் சுற்றுளா செல்கிறது . அவர்களுக்கு எதிராக சார்ப்பனர் வருகிறது , அங்கு தப்பித்து ஒரு ஆமையாரை பார்க்கிறது அவருடன் பேசிவிட்டு பத்திரமாக வகுப்பிற்கு திரும்புகிறார்கள்.ஆனால் வகுப்பு பூட்டியிருக்கிறது.உள்ளே செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.அவர்கள் எப்ப்டி உள்ளே செல்கின்றனர் , அடுத்த நாள் வகுப்பில் அவர்கள் என்ன வரைகின்றனர் என்பதுடன் முடிகிறது.விழியனின் படைப்புகளில் முதன்மையானது என்று சொல்லலாம்.உங்க வீட்டு சுட்டிஸ்கும் படித்துக் காட்டுங்கள்.இந்தப் புத்தகம் ஆங்கிலத்திலும் கிடைக்கிறது.



6.துலக்கம் - பாலபாரதி ( பெற்றோர்களுக்கு )


ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாதது


இந்தப் பழமொழி எதற்கு ஒற்றுப்போகுமோ இல்லையோ இந்த ஆட்டிசத்திற்கு ஒற்றும் போகும் என்கிறார் திரு.பாலபாரதி.ஆட்டிசம் என்ற வார்த்தையை முதன்முதலில் கேள்விப்பட்டது ஹரிதாஸ் என்ற திரைப்படம் மூலம் தான்.அந்த திரைப்படத்தை பார்க்க ஏனோ வாய்ப்பு அமையவில்லை.அதன் பிறகு ஆட்டிசம் துலக்கம் நூலின் மூலம் பரிட்சயமானது.ஆட்டிசம் பற்றி அறிமுகமில்லாத எனக்கு அதன் விவரங்களை அழகிய நெடுங்கதை மூலம் புட்டு புட்டு வைத்திருக்கிறார்.நமது ஒவ்வொரு வாழ்விலும், நட்பு வட்டத்திலோ,சொந்தத்திலோ கண்டிப்பாக ஆட்டிசம் கொண்ட ஒருவரையாது சந்தித்திருப்போம்.அவரும் நம்மைப் போல் ஆனால் என்ன , சற்று மன வளர்ச்சி கம்மியானவர்கள்,வெளியுலகத்துடன் பழக முடியாவதர்கள் என்பதெல்லாம் நமது புரிதலாக இருக்கும்.பல நேரங்களில் அவர்களுடன் எப்படி உரையாடுவது என்பது நமக்கு தெரியாத ஒன்று.அவர்களை பார்க்கும் போதெல்லாம் , சில கேள்விகள் நமக்குள் வரும்...அவர்களுக்கு ஏன் இப்படி ஆனது ,இது நோயா? அவர்களால் என்னென்ன செய்ய முடியும் ? அவர்களின் உலகம் என்ன? அவர்கள் வீட்டில் இருப்போர் மருத்துவரை அனுகினார்களா? சில நேரங்களில் அவர்களின் திறமைகளைப் பார்த்து வியந்து , வீட்டிலிருப்போர் ஒழுங்காக சிகிச்சை பண்ணி இருந்தா இவர்கள் குணமாகிருந்திருப்பார்களோ என்றெல்லாம் தோன்றும்.நம் வாழ்வில் சந்தித்த நபர் இந்த நூலில் உங்களோடு கண்டிப்பாக பயணிப்பார்.அவர்களைப் பற்றின புரிதல்கள் கண்டிப்பாக மாறும்.

ஆட்டிசம் என்பது நோயல்ல , அது ஒரு குறைபாடு என்பதிலிருந்து துவங்குகிறது.ஆட்டிசம் பற்றின விழிப்புணர்வு இல்லாத சமூகம் குறைபாடுள்ள ஒருவனை எப்படி கையாள்கிறது என்பதே இக்கதையின் கரு.3-5 வயதுற்குள் இந்தக் குறைபாடுகளை கையாளுதலின் அவசியம் ,விழிப்புணர்வின் முக்கியம்,பெற்றோர்களின் தவிப்பு, மனநிலை,கோபம் என கதை நகர்கிறது.தமிழகத்தில் ஆட்டிசம் பற்றின விழிப்புணர்வு இல்லை என்ற ஆசிரியரின் கவலை இந்தக் கதையை படித்து முடிக்கும் போது கண்டிப்பாக நமக்கும் தொற்றிக் கொள்ளும்.அந்தக் கவலைக்கு மருந்தாகவும் நமது என்னெற்ற கேள்விகளுக்கு விடையாகவும் இந்த துலக்கம் அமையும்.

ஆட்டிசம் பற்றி முழுவதுமாக தெரிந்துக் கொள்ள :http://blog.balabharathi.net/?page_id=25



7. குட்டி இளவரசன் (சிறுவர் இலக்கியம்)




இது ஒரு மொழிப்பெயர்ப்பு நூல் , தமிழில் 3 நபர்கள் மொழிப்பெயர்த்துள்ளனர்.இது தெரியாமல் மிகவும் சுருக்க வடிவத்தை வாங்கினேன். சற்று ஏமாற்றம் தான் . முழுவதுமாக ரசிக்க முடியவில்லை.ஆதலால் வாங்கும் போது மொழிப்பெயர்ப்பாளரை கவனித்து வாங்கவும்.கதையின் நாயகன் குட்டி இளவரசன் , அவன் ஒவ்வொரு கிரகமாக செல்கிறான், அங்கு அவன் சந்திக்கும் நபர்களிடம் அவன் கேட்கும் கேள்விகள் வாசிப்பவரின் கற்பனைகளை தூண்டுவதாக அமைந்திருக்கும்.இந்தப் புத்தகம் பற்றி எஸ்.ரா நல்ல அறிமுகத்தை தந்திருக்கிறார்.
எஸ்.ரா வின் அறிமுகம் : http://www.sramakrishnan.com/?p=551




8.சீனிவாச இராமனுஜன் 125 - இரா - நடராசன் ( சிறுவர் இலக்கியம் )


இராமனுஜன் வாழ்வை வெறும் 125 வரிகளில் சொல்லியிருக்கிறார் நடராசன்.இராமனுஜன் பற்றின ஒரு தாக்கத்தை எளிய முறையில் சிறுவர் மனதில் ஏற்படுத்த இந்தப் புத்தகம் உதவும்.இராமனுஜன் பற்றி முழுவதும் தெரிந்துக்கொள்ள இது உதவாது.இராமனுஜம் பிறந்த 125 வருடங்கள் முடிந்ததை முன்னிட்டு இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளது.





9.விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள் - இரா.நடராசன் (சிறுவர் இலக்கியம்)

2014ம் ஆண்டிற்கான ’பால சாகித்ய அகடமி’ விருதுப் பெற்ற புத்தகம் . மருத்துவத்துறைக்கு சவாலாக இருந்த நோய்களுக்கான மருந்துக்கள் கண்டுப்பிடிக்கப்பட்ட விபரங்களை விக்ரமாதித்தன் மற்றும் வேதாளத்தின் உரையாடல்களை கொண்டு அழகாக விளக்கியிருப்பார் நடராசன்.ஆனால் ஒவ்வொரு கதையும் ஒரே மாதிரியான template ஆகவேயிருக்கும்.முதலில் வேதாளம் , விக்ராமதித்தனை போற்றி அப்புறம் என் கேள்விக்கு பதில் சொல்லு இல்லெயெனில் உன் தலை வெடித்து விடும் என்று சொல்லும் , கேள்வி இறந்தவரைப் பற்றி இருக்கும் , அவனது தீய செயல்களை காரணம் என வேதாளம் சொல்லும்.உடனே விக்ரமாதித்தன் அட முட்டாள் வேதாளமே என்று ஆரம்பித்து , அந்த இறப்பினைப் பற்றியும் அதற்கு காரணமாக இருந்த நோயினைப் பற்றியும் விளக்குவான்.அதன் மருந்து எவ்வாறு கண்டுப்பிட்க்கப்பட்டது ,அது எப்படி நடைமுறைக்கு வந்தது என்றிருக்கும்.தொடர்ந்து படித்தால் கொஞ்சம் போர் அடித்து விடும்.இதை தினம் ஒன்று என்ற ரீதியில் படித்தால் நன்றாக இருக்கும்.அப்படித்தான் நான் படித்தேன்.இந்தத் தகவல்களை படிக்கும் போது பொதுவான விஷயம் ஒன்றினை கவணிக்க முடிகிறது அது , மருந்துக்கள் முதல் முதலில் மனித உடலில் எவ்வாறு சோதிக்கப்பட்டது என்பது. யாரோ ஒரு ஏழை நோயாளியால் தொடர்ந்து சிகிச்சை செய்ய முடியாமல் போகிறது அப்பொழுது கைவிடப்பட்ட அந்த நோயாளியின் மீதே இந்த மருந்துக்கள் சோதனை செய்யப்படுகிறது..வெற்றி அடைந்தவை மட்டுமே இங்கு பேசுகிறோம்.தோல்விகளின் கதைகள் ஏதேனும் இருக்குமா என்று மனம் தானே ஓட்டிப் பார்த்து அவ்வப்போது அச்சம் அடைகிறது.






தொடரும்....

Sunday, December 28, 2014

2014 வாசிப்பு - சமூக நிகழ்வுகள்

2014 ல் எனது புத்தக தேடல் நன்றாக வளர்ந்ததாக ஒரு உணர்வு . நண்பர்கள் மூலமும் , இணைய‌த்தின் மூலமும்  நிறைய அறிமுகங்கள் கிடைத்தது . அனைத்தையும் குறித்து வைத்திருக்கிறேன் , வாய்ப்பு கிடைக்கும் போது வீட்டின் புத்தக அலமாரியை ரகசியமாக நிரப்ப வேண்டியது தான் .  2015 புத்தக திருவிழா கொண்டாட்டம் வேற முகப்புத்தகத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.இது தான் சரியான தருணம் என தோன்றுகிறது."டேய் மச்சி ஏதாச்சும் புக் சொல்லுடா " என்று கேட்கும் சில நண்பர்களுக்காகவும் , நான் வாசித்த அனுபவத்தை கொஞ்சம் அசைப் போடவும் அப்புறம் சிலர் சொல்வது போல கொஞ்சம் சீன் போடவும்...2014ல் நான் வாசித்த புத்தகங்களைப் பற்றி 4-5 வரிகள் எழுதலாம்னு இருக்கேன்.அதில் முதல் பதிவாக சமூக நிகழ்வுகளை குறைவான புனைவோடு பேசிய 4 புத்தகங்களைப் பற்றி ...


1.பெத்தவன் - இமையம்


தருமபுரி என்று சொன்னதும் நம் நினைவிற்கு தற்பொழுது வருவது இளவரசன் மற்றும் திவ்யாவின் தந்தை மரணமும் தான்.சட்டரீதியாக எதையும் தீர்மானமாக சொல்ல முடியாத நிலையில் நம் மனதிற்கு தெரியும் இது ஜாதி எனும் சாத்தானின் செயல் என்று.அப்படி சாத்தானின் கையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஒரு தந்தையின் கதை தான் இந்தப் பெத்தவன்.காதல் காதலித்தவர்களை வாழ வைக்கிறதோ இல்லையோ , கண்டிப்பாக ஜாதியையும் அதை சார்ந்த அரசியல் கட்சிகளையும் நன்றாக வாழ வைக்கிறது.காதலுக்கு பெத்தவன் தலையசைத்த பின்னரும் ஊரே வேசிப் பேச்சு பேசி ,அந்தப் பெண்ணின் உசுரை உருவ என்னென்ன பாடுபடுகிறது ஒரு கூட்டம்.அதற்கு கெளரவ கொலைன்னு ஒரு பெயர் வேற வைக்கிறார்கள்.அப்படிப்பட்ட ஒரு கெளரவ கொலை தான் இந்த கதையின் தளம்.

புத்தகத்திலிருந்து சில வரிகள்...

“அப்பிடியா? ஒன்னெ நம்பறம். ஒன் வாக்குப்படியே வச்சிக்குவம். காரியத்த எப்பிடி முடிக்கப்போற அதெச் சொல்லு?” என்று துரை கேட்டான்.
“ஊரு சொல்றபடி.”
“பூச்சி மருந்த வாயில் ஊத்தி, ஒரு அறயில போட்டுப் பூட்டிப்புடனும். எம்மாம் கத்தினாலும் கதவயும் தொறக்கக் கூடாது. ஒரு வா தண்ணீயும் தரக் கூடாது. செத்த நேரத்துக்கெல்லாம் கத முடிஞ்சிடும்” என்று இடுப்பில் குழந்தையை வைத்திருந்த பெண் சொன்னாள்.

2.தூப்பக்காரிமலர்வதி [ சாகித்ய அகாதமி - YUVA PURASKAR விருது பெற்ற நாவல்]


 சாலைகளில் அவ்வப்போது பாதள சாக்கடையிலிருந்து ஒரு தலை எட்டிப் பார்க்கும் காட்சி நம் கண்ணில் பட்டுக் கொண்டே தான் இருக்கிறது . எந்தவித கவசமோ அல்லாது பாதுக்காப்பு முறையோ இல்லாமல் தான் சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.சில மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்று , சாக்கடையை சுத்தம் செய்யும் போது விஷ வாய்வு தாக்கி இருவர் இறந்து விட்டனர்.காரணம் அவர்களுக்கு எந்தவித பாதுகாப்பு முறையும் வழங்கபடவில்லை.அவர்களது இறப்பு செய்தியாக வந்து மறைந்தும் விட்டது . தொழில்நுட்பம் எக்குத்தப்பாய் வளர்ந்து நிற்கிறது, ஏதேதோ சாதனங்கள் வந்துவிட்டது ஆனால் இன்னும் இவர்களது வாழ்வை எளிமைப் படுத்த ஒரு சாதனம் வந்தப்பாடில்லை.இந்த ஆதங்கத்தை புத்தகம் முழுதும் நாம் காணலாம்.சாலையிலோ , அலுவலகத்திலோ , ரயில் நிலையத்திலோ , பொது கழிவறையிலோ , மருத்துவமனையிலோ அன்றாடம் நாம் பார்க்கும் மனிதர்களின் வாழ்வை சற்று அவர்களது அருகில் நின்று பார்க்கும் உணர்வை இந்தப் புத்தகம் ஏற்படுத்தும்.

3.கருத்த லெப்பை - கீரனூர் ஜாகிர்ராஜா


ஓசுர் புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகம் தான் ஜாகிரின்
புத்தகங்கள்.படிங்க நல்லா இருக்கும் என்று விற்பனையாளரின் பேச்சைக் கேட்டு வாங்கியது . என் நல்ல நேரம் அவர் என்னை ஏமாத்தவில்லை.ஜாகிர் தமிழின் பஷீர் என்ற புத்தகத்தின் முன்னுரை என்னை சலிப்படையச் செய்தது .ஆனால் அவரது படைப்பு சலிப்படையச் செய்யவில்லை.
முஸ்லீம் சமூகம் பற்றி வெறும் மேலோட்டமான புரிதலே இருக்கிறது . அங்குள்ள வேறுபாடுகளும் பாகுபாடுகளும் நான் அறியாததே , ஏழை - பணக்கார பேதம் தொழுகும் இடத்தில் எவ்வாறு இருக்கும் , தெருக்களில் எப்படி இருக்கும்  என்று நாவல் பேசுகிறது.கதையின் நாயகனின் குடும்ப சூழ்நிலைகள் , மனநிலை பாதிக்கப்பட்டவன் என தெரிந்தும் அவனுக்கு அக்காவை மனம் முடித்து வைக்கிறாள் அன்னை.அக்கா வாழ்வில் எவ்வளவு நொடிந்து போகிறாள் , நாயகனுக்கு அறிமுகம் ஆகும் ஒரு சாமியார்.அவரது வாழ்வு என கதை நகர்கிறது.நாயகனின் பகடியை நாவல் முழுதும் ரசிக்கலாம். 

4.ஜின்னாவின் டைரி - கீரனூர் ஜாகிர்ராஜா


இலக்கியத்தில் நாம் ரசித்த கதாப்பாத்திரங்களை வைத்து ஒரு படைப்பு வந்தால் நல்லா இருக்கும்ல , என்று நண்பர் கேட்டது , ஏனோ இந்தப் புத்தகம் வாசிக்கும் போது தோன்றிக் கொண்டே இருந்தது.ஏனென்றால் ஒரு படைப்பாளியின் வாழ்வை சித்தரிப்பதாகவே இந்த நாவல் நகர்கிறது.ஒரு நாவல் எழுதுவதற்காக மலை பாங்கான இடத்திற்கு தனது உதவியாளருடன் கதையின் நாயகர் ( எழுத்தாளர்) செல்கிறார்.அங்கு அவர்களுக்கிடையில் நடக்கும் சுவாரஸ்யமான பேச்சுகளும் சில ப்ளாஷ்பேக்குகளும்  தான் இந்த நாவல். எழுத்தாளர்களையும் இலக்கிய நிகழ்வையும் கேளியும் , கிண்டலும்  செய்வதாகத் தான் இந்த நாவல் இருக்கும் அதுவும் சிற்றிதழ் ஒன்றில் பிச்சைக்காரர் ஒருவரை பேட்டி எடுப்பதாக காட்சி வரும் பாருங்க , சும்மா கிழி கிழின்னு கிழிச்சிருப்பாரு ஜாகிர்.மெல்லிய புன்னகையோடு இந்த நாவலை வாசிக்கலாம்.

குறிப்பு : ஜாகிரின் இரண்டு நாவலிலும் A விஷயங்கள் இருக்கிறது .




தொடரும்